தன்னைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள தாம் தயங்கியதே இல்லை என்கிறார் நடிகை சமந்தா.
முன்பு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தாம் இருப்பதாக கருதிய நிலை மாறி, இப்போது மனம் முழுக்க தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக மாறிவிட்டதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சகுந்தலம்', இரண்டு இணையத் தொடர்கள் என்று பரபரப்பாக இயங்கி வருகிறார் சமந்தா.
அண்மையில் இவர் நடித்து வெளியான 'ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரால் ஏற்பட்ட சர்ச்சை இவரை சற்றே வருத்தப்பட வைத்துள்ளது. எனினும் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க தாம் எப்போதுமே தவறியதில்லை எனச் சுட்டிக் காட்டுகிறார்.
"ஒரு நடிகையாக எனக்கென பல பொறுப்புகள் உள்ளன என்பதை உணர்ந்திருக்கிறேன். அதிலும் நீண்ட காலமாக திரையுலகில் நீடிக்கும் என்னைப் போன்றவர்கள், சினிமா என்பது இளையர்களை மனதளவில் மிக எளிதில் பாதிக்கச் செய்யும் என்பதை அறிந்துள்ளோம்.
"பொறுப்புடன் செயல்பட்டதால்தான் நான் இன்று முன்னணி நடிகையாக பேசிக்கொண்டிருக்கிறேன். பொறுப்புகளைத் தவிர்ப்பதோ சுருக்கிக்கொள்வதோ எனக்குப் பிடிக்காது. நான் எப்போதுமே அவற்றைச் சுமக்க விரும்புகிறேன்.
"அது கடினமான பணி என்பது நன்கு தெரியும். இதன் காரணமாக பலமுறை காயப்பட்டிருக்கிறேன், சோகமடைந்திருக்கிறேன்.
"எனினும் இந்தக் கடினமான பாதையை விட்டு விலகியதில்லை," என்கிறார் சமந்தா.
சமூகம், தொழில் சார்ந்த விஷயங்களுக்காக குரல் கொடுக்கும்போது பொதுவெளியில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று குறிப்பிடுபவர், விருப்பு வெறுப்பு எனும் கட்டங்களைத் தாம் கடந்து வந்திருப்பதை மறக்கவில்லை என்கிறார்.
"சமூக வலைத்தளங்களில் சிலர் என்னைக் கடுமையாக விமர்சிப்பதுண்டு. ஆனால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டதில்லை. அது சாத்தியமும் அல்ல. சிறிய விஷயம் என்று எதையும் கருதுவதில்லை.
"என்னால் அத்தகைய விவகாரங்களைக் கையாள முடியும் என்பதை எனது இத்தனை ஆண்டு கால அனுபவம் உணர்த்தி உள்ளது. ஒருவேளை மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமற்றுப் போகலாம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தாரின் ஆலோசனையைப் பெற்றுச் செயல்பட வேண்டும்.
"என்னைப் பற்றிய எத்தகைய சர்ச்சைகளானாலும் அவை குறித்து விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்.
"அனைத்துக்கும் என்னால் உரிய பதில்களை அளிக்க முடியும். நான் அணியும் உடை, எனது வேலை, நான் ஈடுபடும் செயல்கள் என்று எதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டாலும் பதிலளிக்க நான் தவறியதில்லை," என்கிறார் சமந்தா.
கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகும் படங்களில் தமக்கும் விருப்பமுண்டு என்று குறிப்பிடுபவர், அத்தகைய படங்களின் கதை சொல்லும் போக்கு மாறவேண்டும் என்கிறார்.
"பெரும்பாலான அத்தகைய படங்களில் நாயகி முதலில் பலவீனமாக இருப்பதாகவும் அதன்பிறகு சூழ்நிலை நாயகியை அறவே மாற்றி போராடி வெற்றி பெற வைப்பதாகவும் சித்திரிக்கப்படுகிறது. நான் இதை விரும்பவில்லை. மாறாக, இந்திய மொழிகளில் சூப்பர் நாயகர்கள் போல் சூப்பர் நாயகிகளையும் உருவாக்க வேண்டும். பெண்கள் தொடக்கம் முதலே பலசாலிகளாக சித்திரிக்கப்படுவதை விரும்புகிறேன். தென்னிந்திய திரையுலகம் நிறைய மாறிவிட்டது. ஒருவரையொருவர் பாராட்டுவது, வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது என்பது ஆரோக்கியமான விஷயம்.
"'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. படப்பிடிப்பின்போது கேலி, கிண்டல், நகைச்சுவை என பொழுதைக் கழித்தபடியே வேலையைக் கவனிக்கிறோம்.
"பிறந்தது முதல் தமிழில் பேசி வளர்ந்திருக்கிறேன். பிறகுதான் தெலுங்கில் பேசக் கற்றுக் கொண்டேன். இன்னும்கூட சில தெலுங்கு வார்த்தைகள் எனக்குப் புரியாது. எனவே, தமிழில் நடிக்கும் போதுதான் நான் இயல்பாக இருப்பதாக கருதுகிறேன். தமிழ்ப் படங்களே என் மனதுக்கு நெருக்கமாக இருப்பதாகவும் உணர்கிறேன்," என்கிறார் சமந்தா.