காதல், குடும்பக் கதைகள் என்றால் தமக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அதிதி ராவ்.
அத்தகைய கதைகளில் அமையும் தமக்கான கதாபாத்திரங்களில் அனுபவித்து நடிக்க இயலும் என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'ஹே சினாமிகா'. அதில் அவரும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்துள்ளனர்.
"பொதுவாக இருவருக்கு இடையிலான உறவு குறித்து விவரிக்கும் விவாதிக்கும் கதைகளில் கனமான கதாபாத்திரங்கள் அமையும். எனவே, நமது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
"பிருந்தா மாஸ்டர் இயக்கிய 'ஹே சினாமிகா' படம் அப்படிப்பட்ட அனுபவத்தைத்தான் எனக்குத் தந்தது. பொதுவாக நெருக்கமான உறவுகள் குறித்து விவரிக்கும் கதைகளில் பல்வேறு திருப்பங்கள் இருக்கும்.
"குறிப்பாக, காதல் கதைகளில் இத்தகைய திருப்பங்கள் இடம்பெறும்போது கதையின் ஓட்டம் சுவாரசியமாக இருக்கும். இப்போதெல்லாம் காதல் கதைகளை திரையில் வெவ்வேறு கோணங்களில் கையாள்கிறார்கள்.
"இனி எந்தவொரு காதல் படத்தையும் முன்பு வெளியீடு கண்ட படத்துடன் ஒப்பிட்டு 'ஒரே மாதிரியாக இருக்கிறது' என்று யாரும் விமர்சிக்க முடியாது. காரணம், இன்றுள்ள எழுத்தாளர்கள் மிக சாதுர்யமாக கதை, திரைக்கதையை எழுதுகிறார்கள்," என்கிறார் அதிதி.
இந்திப் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்படுவது சரியல்ல என்று குறிப்பிடுபவர், நல்ல கதைகள் மட்டுமே தமக்குத் தேவை என்கிறார். தனக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைந்தால் வெளிநாட்டு மொழிகளில் நடிக்கவும் தயாராக உள்ளாராம்.
"பிரெஞ்சு, ஸ்பானிய மொழிப் படங்களில் நடிப்பதற்கும்கூட நான் தயார். அண்மைக்காலமாக அம்மொழிகளில் சிறந்த படைப்புகள் உருவாகின்றன. நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதாபாத்திரங்களே நான் எந்தப் படத்தில் நடிக்கிறேன் என்பதை தீர்மானிக்கின்றன," என்கிறார் அதிதி.
கொரோனா நெருக்கடி காரணமாக இவர் நடிக்க ஒப்புக்கொண்ட சில படங்கள் முடங்கிப் போய்விட்டனவாம். குறிப்பாக, தனுஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை என்று வருந்துகிறார்.
"அந்தப் படத்தில் எனக்குரிய காட்சிகளில் முழுமையாக நடித்து முடித்துவிட்டேன். படம் மிகச்சிறப்பான முறையில் வளர்ந்து வந்தது. ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்றும் படம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.
"ஊடகங்கள் மூலமாகத்தான் அவ்வப்போது சில தகவல்களைக் கேள்விப்படுகிறேன். நாம் நடிக்கும் படத்துக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்போது மனம் வருந்துகிறது," என்கிறார் அதிதி.
வித்தியாசமான கதைக்களங்கள் அமைந்தால் கால்ஷீட் ஒதுக்குவதிலும் சம்பள விஷயத்திலும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக குறிப்பிடுபவர், ரசிகர்களுக்கு தனது நடிப்பு போரடிக்கும் முன்பே திரையுலகில் இருந்து விலகிவிட வேண்டும் என்பதே தமது திட்டம் என்கிறார்.
"ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதன் பிறகு திரையுலகில் நீடிப்பதில் அர்த்தமில்லை. நல்ல வேளையாக இதுவரை அவ்வாறு நடக்கவில்லை.
"எனக்கும் அப்படியோர் எண்ணம் ஏற்படவில்லை. எனவே, எனது திரைப்பயணம் எந்தவித விமர்சனத்துக்கும் ஆட்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்கிறார் அதிதி ராவ்.
தற்போது இந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகக் குறிப்பிடுபவர், தமிழில் புதுப்படம் ஒன்றில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிறார்.
இந்தியில் கதாநாயகிகள் சம்பளத்தை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில், அதிதியோ, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் மட்டுமே கறாராக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதைவிட சிறந்த பாராட்டு தமக்குக் கிடைக்காது என்று பூரித்துப்போகிறார் அதிதி ராவ்.
"கலைஞர்களுக்கு இத்தகைய பாராட்டுகள் தான் உற்சாகம் தரும். கூடுதல் சம்பளம், விருதுகள் என்பன எல்லாம் இரண்டாம் பட்சம்தான். நான் இதுபோன்ற பாராட்டுகளை நேசிக்கிறேன்," என்கிறார் அதிதி ராவ்.