ஊடகவியலாளர்களைப் பார்த்து நடிகை டாப்சி கேள்வி எழுப்பி இருப்பது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 'தோ பாரா' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் டாப்சி. இந்தப் படம் வரும் 19ஆம் தேதி திரை காண்கிறது.
மும்பையில் நடைபெற்ற இப்படத்துக்கான விளம்பர நிகழ்வில் டாப்சி கலந்து கொண்டார். எனினும் அவர் நிகழ்ச்சி அரங்குக்கு வந்து சேர சற்று தாமதமாகிவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் அவரைப் புகைப்படம் எடுத்தபடியே, தாமதமாக வர என்ன காரணம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு டாப்சி விளக்கம் அளிக்க, அதை ஏற்காத செய்தியாளர்கள் சிலர் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். இதனால் ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, இதுவரை தாம் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் குறித்த நேரத்தில் வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார் டாப்சி. தம்மிடம் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது நியாயமல்ல என்றும் கூறினார்.
"எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நான் சரியான நேரத்திற்கு வந்துவிடுவேன். நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன். நீங்கள் மரியாதையுடன் பேசி னால் நானும் அதே மரியாதையைத் தருவேன். இந்த அரங்கில் உள்ள கேமரா என் பக்கம்தான் இருக்கிறது, அதனால் என் பக்கம் மட்டும்தான் தெரியும். அதே கேமரா உங்கள் பக்கம் திரும்பினால், நீங்கள் என்னோடு எப்படிப் பேசுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் புரியும்," என்றார் டாப்சி.
இந்த வாக்குவாதம் தொடர்பான காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.