பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடி ரூபாயைத்(S$8.8 மில்லியன்) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான முன்பதிவுகளை கணக்கில் கொண்டு இந்த எண்ணிக்கை முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காண இன்று காலையிலிருந்தே ரசிகர்கள் கூட்டங்கூட்டமாக திரையரங்குகளுக்குத் திரண்டனர். இதுவரை தமிழ்ப்படங்கள் காணாத முதல்நாள் வசூலை இத்திரைப்படம் முறியடிக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் திரைப்படத்துக்கு 17 கோடி ரூபாய் மதிப்புள்ள முன்பதிவுகள் கிடைத்ததாகக் கூறப்பட்டது. கமல் ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள முன்பதிவு வசூலிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக முதல் நாள் முன்பதிவு இந்தியாவில் மட்டும் 35 கோடி ரூபாய் வரை ஈட்டும் என்றும், வெளிநாடுகளில் இந்தத் தொகை 20 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தால், முதல் நாள் மட்டும் 40 கோடி ரூபாய் வரை வசூலிக்கமுடியும் எனக் கூறப்பட்டது.
சிங்கப்பூரிலும் இன்று திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். கோல்டன் மைல் கொம்ப்ளக்ஸில் உள்ள கார்னிவல் சினிமாஸ் திரையரங்கில் காலை 6.30 மணிக்குத் திரையிடப்பட்ட முதல் காட்சிக்கே நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இன்று மட்டும் சிங்கப்பூரின் அனைத்து திரையரங்குகளிலும் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் இடம்பெறுகின்றன.