தமிழில் மாறுபட்ட கதைக்களம், முயற்சியுடன் உருவாகி உள்ளது ‘டபுள் டக்கர்’ திரைப்படம்.
இது ‘அனிமேஷன்’ கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள படம். மீரா மஹதி இயக்கியுள்ளார்.
“சிறு வயதிலிருந்தே கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். தேவதைகளை மையப்படுத்தி வலம் வரும் கதைகள் குழந்தைகளுக்கு எப்போதுமே பிடித்தமான கதைகளாக இருக்கும்.
“தமிழில் ‘அனிமேஷன்’ படங்கள் பல முன்பே வெளியாகி உள்ளன. அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘அயலான்’ படமும்கூட அப்படிப்பட்ட ரகம்தான்.
“பொதுவாக மனிதர்களை நடிக்க வைத்து அதை நவீன தொழில்நுட்பம் மூலம் அனிமேஷன் கதாபாத்திரங்களாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் இத்தகைய கதாபாத்திரங்களுக்கு புதிதாக வடிவம் கொடுத்து உருவாக்கி உள்ளோம்.
“படம் முழுவதும் இந்தக் கதாபாத்திரங்கள் செய்யும் அலப்பறைகள் நிச்சயமாக வயிறு குலுங்க வைக்கும். அந்த அளவுக்கு மனநிறைவு தரக்கூடிய வகையில் நகைச்சுவை பகுதி இடம்பெற்றுள்ளது,” என்கிறார் அறிமுக இயக்குநரான மீரா.
இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
“ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதை நகைச்சுவை, கற்பனை, சில அதிரடிக் காட்சிகளுடன் விவரித்துள்ளோம்,” என்கிறார் மீரா மஹதி.
கதை நாயகனாக தீரஜ் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்தவர்.
நல்ல கதைக்காக தீரஜ் காத்திருந்த போதுதான் இயக்குநர் மீரா சந்தித்துள்ளார். அதன் பிறகு படத்தை தாமே தயாரிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பிறகென்ன! கதை கேட்டு முடிந்ததும் மிகுந்த உற்சாகமாகி விட்டார் தீரஜ். கதைப்படி அரவிந்த், ராஜா என இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம்.
இவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், யாஷிகா ஆனந்த் என இரண்டு நாயகிகள் உள்ளனர். இவர்களைத் தவிர கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
“ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தொடக்கத்தில் அனிமேஷன் படம் என்பதும் அறிமுக இயக்குநர் என்பதும் அவரைத் தயங்க வைத்துள்ளது.
“எனினும் முழுப்படத்தையும் பார்த்த பிறகு முடிவெடுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தார். பிறகு தயக்கமின்றி இசையமைக்க முன்வந்தார்.
“அவரைப் போன்ற வேகமான இசையமைப்பாளரைப் பார்த்ததில்லை. ஆர்மோனியப் பெட்டியில் கைவைத்த அரை மணி நேரத்தில் பாடல்களுக்கு மெட்டமைத்துவிட்டார்.
“தாலுமா’ என்று தொடங்கும் முதல் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்கிறார் மீரா மஹதி.