முதியவர்களை அதிகளவில் பாதித்து வரும் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கருதி, இம்மாதம் 30ஆம் தேதி வரை சிங்கப்பூரிலுள்ள தாதிமை இல்லங்களுக்குச் செல்ல வருகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தாதிமை இல்லங்களில் வசிக்கும் நெருங்கிய உறவினர்களைக் குடும்பத்தினர் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக வாரத்திற்கு இரண்டு முறை ஈசூனில் உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் தமது பெரியம்மாவான 96 வயது திருவாட்டி ஃபிலிப் ஜெயாவை காணச் செல்லும் திருவாட்டி ஜூலி ஃபிலிப்ஸ், இம்மாத இறுதி வரை பெரியம்மாவைப் பார்க்க முடியாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டதும் அழுதுவிட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் தங்கியிருக்கும் திருவாட்டி ஃபிலிப்பை திருவாட்டி ஜூலியும் அவரது இரண்டு பிள்ளைகளும் அடிக்கடி சென்று சந்திந்து வந்தனர்.
“என் சொந்த பாட்டியைவிட என் பெரியம்மாவுடன்தான் எனக்கு நெருக்கம் அதிகம். ‘அம்மாச்சி’ என்று அவரை செல்லமாக அழைப்பேன். கோழிக் கறி, நண்டு, மீன் வறுவல் என தமக்குப் பிடித்தமான உணவு வகையைச் சமைத்து இல்லத்திற்கு எடுத்து வரச் சொல்வார்.
“புது சட்டை, முக ஒப்பனை உள்ளிட்ட பொருட்களையும் அடிக்கடி வாங்கி வரச் சொல்வார். அவருக்கென்று யாருமில்லை,” என்று கூறிய 44 வயது ஜூலி, தம்மைப் பார்க்காமல் பெரியம்மா ஏங்கி விடுவார் என்று வருத்தப்பட்டார்.
எனினும், இல்லவாசிகள் தொடர்ந்து உறவினர்களுடன் தொடர்புகொள்ள வாட்ஸ்அப் காணொளி அழைப்பு வசதிகளை ஸ்ரீ நாராயண மிஷன் இல்லம் ஏற்படுத்திக் கொடுத்தது, அவருக்குக் கவலையைக் குறைத்தது என்றார் ஜூலி.
“எப்போதும்போல, அன்றாடம் தொலைபேசியில் அழைத்து பெரியம்மாவுடன் பேசி வருகிறேன். வாட்ஸ்அப் காணொளி மூலம் அவரைப் பார்த்துப் பேச முடிவது நிம்மதி தருகிறது. நன்கு யோசித்துப் பார்த்தால், முதியோர் இல்லத்திற்குச் செல்வதற்கான தடை ஒரு மாத காலம்தானே. இதுவும் வேகமாக கடந்துச் சென்றுவிடும். விரைவில் அவரைச் சந்திக்க முடியும்,” என்றார் ஜூலி.
ஜூலியைப் போலவே, ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் தங்கியிருக்கும் தமது தாயாரை வாரத்திற்கு நான்கு முறை காணச் செல்வார் திருமதி சுப்பம்மாள் சிவசாமி, 64.
87 வயதாகும் கைநிச்சி ஐளு என்ற அவரின் தாயார் ஒராண்டுக்கும் மேலாக ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசித்து வருகிறார்.
“நோயின் காரணத்தால் என் தாயார் அதிகம் பேசமாட்டார், இருப்பினும் அவரைப் பார்த்து, நலம் விசாரித்து வருவது என் வழக்கம்,” என்றார் சுப்பம்மாள்.
“வருகையாளர்களுக்கான இந்தத் தடையை நான் வரவேற்கிறேன். இந்த நேரத்தில் பாதுகாப்புதான் முக்கியம். கொரோனா கிருமித்தொற்றால் வயதானவர்களுக்கு ஆபத்து அதிகம். யாருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகயும் கணிக்க முடியாது. இந்த நிலையில் சந்திப்புகளைத் தவிர்ப்பதே நல்லது,” என்றார் சுப்பம்மாள்.
இந்நிலையில், இல்லத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்குத் தேவையான தங்கும் வசதிகளையும் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.தேவேந்திரன் கூறினார்.
“இல்லவாசிகள் உட்பட தாதிமை இல்ல ஊழியர்களின் உடல்நலத்தைப் பேணுவதும் முக்கியம். இல்லவாசிகளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் இவர்கள் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம். நிர்வாக சேவையில் பணிபுரியும் பல ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்லிவிட்டோம்.
“முன்னிலை ஊழியர்கள் பலரும் இல்லத்தில் அமைந்திருக்கும் தங்கும் விடுதியில் வசித்து வருகிறார்கள்.
“தாதிமை இல்லத்திலிருந்து தொலைதூரத்தில் தங்கும் ஊழியர்களுக்குச் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளேம்,” என்று திரு தேவேந்திரன் கூறினார்.