பண்டைய காலம் முதல் தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள உறவு, உரசல், இரு மொழிகளும் தோன்றிய விதம், வளர்ச்சி போன்ற பல அம்சங்களைக் குறித்த தெளிவுரையை வழங்கினார் இரு மொழிகளிலும் ஆழமான தேர்ச்சி பெற்ற பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட்.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து 'தமிழும் சமஸ்கிருதமும்: சிவனின் இரு கண்கள்' எனும் மெய்நிகர் நிகழ்ச்சிக்கு சென்ற மாதம் 31ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
'ஸூம்' இணைப்பு வழியாகக் கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருந்து சிறப்புரை ஆற்றினார் திரு ஹார்ட். சிங்கப்பூர் உட்பட மலேசியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் நிகழ்வில் இணைந்தனர்.
தமிழின் பெருமைகளைப் பற்றி பல சுவாரசியமான வரலாற்றுத் துணுக்குகளை எடுத்துரைத்த பேராசிரியர் ஹார்ட், சமஸ்கிருதத்துடன் தமிழை ஒப்பிட்டும் பேசினார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் பல மொழிகளின் அறிஞருமான பேராசிரியர் ஏ.கே. ராமானுஜத்திடம் தமிழ் கற்றவர் பேராசிரியர் ஹார்ட்.
பெர்க்லி, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய திரு ஹார்ட், 2000ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் தமிழ்மொழியைச் செம்மொழியாகப் பிரகடனப்படுத்த முக்கியப் பங்காற்றியது. இரு மொழிகளையும் பற்றி ஆழமாக ஆய்வு செய்து கட்டுரையையும் எழுதியுள்ளார்.
"தமிழ் சிங்கப்பூரில் இன்று ஓர் ஆட்சிமொழி. சமஸ்கிருதம் தென்கிழக்காசியாவில் பண்டைக்காலத்தில் பரவலாக ஊடுருவிய மொழி; இந்தியாவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழோடு ஒட்டி உறவாடிய மொழி. எனவே, இவ்விரு மொழிகளைப் பற்றிய சரியான புரிதல் நமக்குத் தேவை," என்று சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் திரு அருண் மகிழ்நன் தெரிவித்தார்.
"இந்திய கலாசாரத்தின் அடிப்படையாக இந்த இரு மொழிகளும் விளங்கிவருவதை இவரது பேச்சு வலியுறுத்தியது. இரு மொழிகளையும் இவர் ஆழமாகப் படித்துள்ளதால் இவர் தரும் விளக்கங்கள், விழிப்புணர்வைத் தரும் என்பது என் நம்பிக்கை," என்று கூறினார் பேராசிரியர் ஹார்ட்டுடன் சுமார் 40 ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் திரு சுப்பையா லெட்சுமணன்.
செய்தி: இர்ஷாத் முஹம்மது