தாயாரைப் போல தம்மைப் பார்த்துக் கொண்ட வளர்ப்புச் சகோதரி தம் கண்களுக்கு முன் ஜப்பானியர்களால் கொண்டு செல்லப்படும் தறுவாயில் மிகவும் உறைந்து போனதாக நினைவுகூர்ந்தார் திரு கிருஷ்ணா வீரப்பன், 85 (இடது படம்).
“என் தாயார் ஒரு சீனப் பெண்ணைத் தத்தெடுத்தார். நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகே சென்ற வீரர்களின் கண்களில் என் சகோதரி தென்பட்டதை அடுத்து அவர்கள் முன்வந்து அவரைத் தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். நல்ல வேளையாக வீட்டில் இருந்த என் அண்ணனால் அவரைக் காப்பாற்ற முடிந்தது. கப்பல்துறையில் பணிபுரிந்த என் அண்ணன் அப்போது 20 வயது மதிக்கத்தக்கவர். ஜப்பானிய மொழியைச் சரளமாகப் பேசத் தெரிந்த அவர், அந்த ஜப்பானிய வீரர்களைத் திட்டி, மிரட்டி அந்த வளர்ப்பு அக்காவைக் காப்பாற்றினார்.
நார்த் பிரிட்ஜ் ரோட்டில் பிறந்து லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள சந்தர் ரோட்டில் வளர்ந்ததாகத் திரு கிருஷ்ணா தெரிவித்தார். “தற்போது ஸ்ரீ லட்சுமி நாராயண் ஆலயம் இருக்கும் இடத்தில்தான் என் வீடு இருந்தது,” என்றார் கப்பல்களைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்ட தந்தை வீரப்பன், இல் லத்தரசியான தாயார், தமது உடன் பிறந்தவர்கள் ஆகியோருடன் வளர்ந்த திரு கிருஷ்ணா. பிறகு பஃப்ளோ ரோட்டிலுள்ள இருமாடி தரை வீட்டுக்கு மாறினார். போர்க்காலத்திலும் அங்கு தொடர்ந்து தங்கியிருந்தார்.
அவருக்கு எதிரே பழம்பெரும் வர்த்தகர் ஓ. ராமசாமி நாடார் தங்கியிருந்தார். “நாடார் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பழக்கம் உள்ளது. அக்காலகட்டத்தில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணக்காரரான திரு நாடாருக்கு அழகான எட்டு வீடுகள் இருந்தன.
“அழகிய இத்தாலிய பளிங்குக் கற்களால் ஆன அந்த மாளிகையில் நாடார் குடும்பத்தினர் தங்கியபோது அவர்களைக் காண முக்கிய பிரமுகர்கள் வருவது வழக்கம். ஜப்பானியர்கள் வந்த பிறகு அவர்கள் நிர்வாகி ஒருவரிடம் மாளிகையை ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பினர். அவர்களின் வீடுகளில் ஒன்று, ஐஎன்ஏ எனும் இந்திய தேசிய ராணுவப் படையின் மருத்துவமனையாகச் செயல்பட்டது,” என்றார்.
போர்க்காலத்தின்போது ஒரு மாது, அருகிலுள்ள தமக்கும் வேறு சில பிள்ளைகளுக்கும் ஆங்கிலம், தமிழ், கணக்குப் பாடங்களை மாதம் இரண்டு வெள்ளிக் கட்டணத்தில் கற்றுத்தந்ததாகக் கூறினார் திரு கிருஷ்ணா. ஜப்பானியப் பள்ளிக்குச் சரியாகச் செல்லாததற்குக் காரணம், தொடர்ச்சியாக விழும் போர்விமான குண்டுகள். “அடிக்கடி எச்சரிக்கை மணி ஒலிக்கும். நான் படித்த ஜப்பானியப் பள்ளியில் வகுப்பு அரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. எனவே அங்கு செல்வதையும் நிறுத்தினேன்,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள திடலில் பயிற்சி மேற்கொண்ட இந்திய தேசிய ராணுவப் படையினரைப் பார்க்க அடிக்கடி சென்ற தாகத் திரு கிருஷ்ணா குறிப்பிட்டார். “எல்லா வயதைச் சேர்ந்த வீரர்கள் அணி வகுத்துச் செல்லும்போது நானும் விளையாட்டுக்காக அவர்களைப் போல் செய்வேன்,” என்றார். அந்தப் படையைச் சேர்ந்த ஒரு சிலர் அவரது வீட்டில் தங்கினர்.
“போர் நடப்புகளைப் பற்றி அவர்கள்என்னிடம் பேசினர். இந்தியாவின் மீது மிக ஆழமான பற்றைக் கொண்டிருந்த அவர்கள், இங்குள்ள இந்தியர்களின் நலன் பற்றியும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள்,” என்று அவர் கூறினார். 1944 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் கலந்து கொண்ட கூட்டத்தையும் திரு கிருஷ்ணா நினைவுகூர்ந்தார்.
1945ஆம் ஆண்டு ஜப்பானியர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு அரசாங்கப் பள்ளிகளில் இவர் சேர இயலாததால், இறுதியில் ராயல் இங்கிலிஷ் எனும் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணத்தில் சேர்க்கப்பட்டார்.
“பத்து வயதில் தொடக்கநிலை ஒன்றைத் தொடங்க வேண்டிய சூழல் என் காலத்தில் வாழ்ந்த பலருக்கு ஏற்பட்டது,” என்று அவர் கூறினார். அந்தத் தனியார் பள்ளியில் ஈராண்டு பயின்ற பிறகு திரு கிருஷ்ணா, 1947ல் செயிண்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். அங்கு அவர் சிறப்பாகப் படித்து வந்ததால் அவரது கட்டணம் குறைக்கப்பட்டது. அதன் பிறகு ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று கோலாலம்பூர் தொழிற்கல்லூரியில் சேர்ந்தார்.
சிங்கப்பூரின் சாலைக் கட்டமைப்பின் உருவாக்கத்தில் இன்றியமையாத பங்கை ஆற்றிய இவர், சிங்கப்பூரின் பல்வேறு சாலைகளை அமைத்து போக்குவரத்துக் கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துக்கொண்டார்.
லீ குவான் இயூ, கோ கெங் சுவீ, தேவன் நாயர் போன்ற முன்னோடித் தலைவர்கள், ஊழலைத் துடைத்தொழித்து முற்போக்கான நாடாக சிங்கப்பூரை மாற்றியதற்காக தாம் என்றும் நன்றியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.