ஜப்பானிய ஆட்சிக் காலம் துயர்மிகுந்ததாக இருந்தாலும், காலனித்துவ ஆட்சி முடிவுக்குவர இரண்டாம் உலகப் போர் ஒரு காரணமாக இருந்தது என்று கூறும் 94 வயது திரு வைரவன் சுதர்மன் அப்போது பதின்மவயதுச் சிறுவன்.
போர்விமானங்கள் பறக்கும்போது பதுங்கவேண்டும் என்ற கட்டளை இருந்தாலும், அவை வானில் பறப்பதை மற்ற சிறுவர்களுடன் ரசித்த பருவம்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், திருமணவயல் எனும் ஊரில் 1928ஆம் ஆண்டு பிறந்த திரு சுதர்மன், பத்து வயதில் குடும்பத்தைப் பிரிந்து, தாய்மாமா பெருமாள் மண்டோருடன் மலாயாவுக்குக் கப்பல் ஏறினார். கோலா பில்லாவில் அரசாங்க வேலையிலிருந்த மாமாவுடன் குவாட்டர்சில் தங்கினார்.
காலையில் ஆங்கிலப்பள்ளியில் ஆங்கிலமும் மாலையில் கோலா பில்லா முருகன் கோயிலில் தமிழும் படித்தார். அச்சமயத்தில் தொழிலாளர்களுடன் வேலையும் பார்த்த தாகக் கூறிய அவர், “சிறுவர்களுக்கு அப்போது நாள் சம்பளம் 35 காசுதான்,” என்றார்.
“ஆண்களுக்கு 50 காசு, பெண்களுக்கு 45 காசு. தமிழர் மிகுந்த சிரமங்களை அனுபவித்த காலம் அது. அது போர் மேகம் திரளத் தொடங்கியிருந்த காலம்,” என்றார் அவர்.
அப்போது, குளுவாங் ரயில் நிலையத்தில் எதேச்சையாக இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) ஜோகூர் மாநிலத் தலைவரான மாப்பாணம் பிள்ளையைச் சந்தித்தார். இலங்கைத் தமிழரான மாப்பணம் பிள்ளை, சுதர்மனுக்கு வேலை கொடுத்ததோடு தமது வீட்டிலே தங்க இடமும் கொடுத்தார். அவர் மீண்டும் மாமா வீட்டுக்குப் போன சமயத்தில் போர் தொடங்கியது.
சுற்றி வாழ்ந்த தமிழர்கள் அனைவருமே இந்திய தேசிய ராணுவம் பற்றி பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட திரு சுதர்மனும் மாமாவின் விருப்பத்துக்கு எதிராக அப்படையில் சேர முடிவெடுத்தார்.
“ஆனால், மாமா ஐஎன்ஏ ஆதரவாளர். அவருக்கு அங்கே நண்பர்களும் இருந்தனர். அதனால் மாமாவும் மற்றவர்களும் ஐப்பானியரின் கொடுமைகளுக்கு உள்ளாகவில்லை. உணவுக்கு அவ்வளவு சிரமப்படவில்லை,” என்றார் அவர்.
தொடக்கத்தில் சிறார் பிரிவான ‘பால சேனா’வில் சேர்ந்த சுதர்மன், 16 வயதில் ‘காந்தி கம்பெனி’ எனும் படையில் ஒரு சிறு பிரிவில் தலைமைப் பொறுப்பேற்றார்.
கிட்டத்தட்ட 39,000 பேருக்கு பயிற்சி அளித்திருந்தாலும் போரில் ஈடுபடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
சிரம்பானில் அமைந்திருந்த ‘ராஜா’ இந்திய தேசிய ராணுவத்தின் பயிற்சி முகமாகில் இருந்தபோது, 1944ல், சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அங்கு ஹிந்திதான் புழக்கமொழியாக இருந்ததாகவும் அச்சமயத்தில் ஹிந்தி கற்றுக்கொண்டதையும் குறிப்பிட்டார் திரு சுதர்மன்.
“ஜப்பானியர்கள் சரணடைந்து, சந்திரபோஸும் விபத்தில் உயிர் இழந்ததும் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்ற அவர் கம்யூனிஸ்டு வீரர்களுடன் மலைக்காடுகளில் போராளியாகச் செயலாற்றியதை நினைவுகூர்ந்தார்.
“வாழ்நாளில் சொல்லொணாப் பயங்கரங்களைக் காடுகளில் பார்த்தேன். மிகவும் கொடூரமான அனுபவங்கள்,” என்றார் அவர்.
1957ல் மலாயா சுதந்திரம் அடைந்ததும் போராளி வாழ்க்கையை விடுத்த திரு சுதர்மன், 1959ல் சிங்கப்பூர் வந்தார். பின்னர் இங்கேயே அவரது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
“ஜப்பானியர்கள் சரணடைந்த பிறகு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்க மக்கள் மறுத்தனர். சுதந்திரத்தைப் பற்றி அதிகம் எண்ணத் தொடங்கினர். எனவே ஜப்பானியப் படையெடுப்பு முடிவில் நல்லதை ஏற்படுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன்,” என்றார் திரு சுதர்மன்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், தமிழக மக்களைக் காட்டிலும் அதிகம் தவித்த மலாயாத் தோட்டத் தமிழர்களின் நிலை தம்மை காலனித்துவ ஆட்சியை மிகவும் வெறுக்க வைத்ததாக எழுத்தாளரும் கவிஞராகவும் உள்ள திரு சுதர்மன் குறிப்பிட்டார்.
போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.