ஜப்பானிய படையெடுப்பின்போது ஆறு வயது சிறுமியாக 85 வயது திருவாட்டி பஞ்சவர்ணம், போர்க்காலத்தில் சிரமங்கள் இருந்தாலும், இனப்பாகுபாடின்றி எல்லாரும் ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்தது தம்மால் மறக்க முடியாதது என்றார்.
“ஜப்பானியர் ஆட்சியின்போது கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மரவள்ளிக் கிழங்கும் சிறிதளவு அரிசியும்தான் எங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கு சிறிய நிலம் இருந்தது. அங்கு விளைந்த நெல்லையும் காய்கறிகளையும் உணவில்லாமல் தவித்த சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று எல்லாருக்கும் அப்பா இலவசமாக கொடுத்தார்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
மலாக்காவில் 1937ஆம் ஆண்டு பிறந்த திருவாட்டி பஞ்சவர்ணத்தின் தந்தை சக்கரவேலு வாடகை டாக்சி ஓட்டுபவர். ஓர் அண்ணன், இரண்டு அக்காமார்.
“சிறுமியாக இருந்ததால் எனக்கு அச்ச உணர்வு ஏற்படவில்லை. சில நேரங்களில் ஜப்பானிய வீரர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களை எதுவும் செய்யவில்லை. ஆனால் என்னைச் சுற்றி வாழ்ந்தவர்களில் சிலர் போர்க்காலத்தின்போது அதிகம் கொள்ளை அடித்ததால் தண்டிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.
“ஜப்பானியர்கள், சீனர்கள் சிலரை ஒரு சிறிய வீட்டுக்குள் அடைத்து, அந்த வீட்டைத் தீயால் கொளுத்தியதை என் அப்பா நேரில் பார்த்துள்ளார்,” என்ற திருவாட்டி பஞ்சவர்ணம்.
“பத்து ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் போனபோது அந்த மக்களின் கனிவைக் கண்டு மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். மிகவும் பண்புள்ளவர்களாக இவர்களது சந்ததியினரைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் அவர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பாவடை ஆறுமுகத்துடன் செம்பவாங் தமிழ்ச் சங்கத்தில், 1955ல் தமிழவேள் கோ சாரங்கபாணி முன்னிலையில் நடந்த சீர்திருத்த திருமணம் பற்றிப் பேசிய திருவாட்டி பஞ்சவர்ணம், அந்தக் காலத்தின் மகிழ்ச்சியான நினைவுகளையே எண்ணிப்பார்க்க விரும்புவதாகச் சொன்னார்.
போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.