இந்தியா சென்ற பயணிகளிடம் 11 கொவிட்-19 ஓமிக்ரான் துணைத் திரிபுகள் கண்டறியப்பட்டன
டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதிவரை இந்தியாவுக்கு வந்த அனைத்துலகப் பயணிகளிடையே மொத்தம் 11 ஓமிக்ரான் துணைத் திரிபுகள் (subvariants) கண்டறியப்பட்டன. புதிய, ஏற்கெனவே உள்ள துணைத் திரிபுகளின் கலப்பு அவை.
கொவிட்-19 ஓமிக்ரான் வகை திரிபுகளின் துணைவழியை (sublineages) சேர்ந்தவை அவை. பிஏ.5.2 துணைத் திரிபும் பிஎஃப்.7 துணைத் திரிபின் துணைவழி கிருமியும் அவற்றில் அடங்கும்.
உலகளவில் நூற்றுக்கணக்கான கொவிட்-19 திரிபுகள் தற்போது வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சிலவகை கிருமிகளின் பரவல் மட்டுமே கண்காணிக்கப்படுகின்றன.
டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதிவரை கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 19,227 பயணிகளில் 124 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இதுபற்றி தகவல் அறிந்த தரப்பு தெரிவிக்கிறது.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' எனும் பரிசோதனை முடிவு காட்டுவதை இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.