சிங்கப்பூர் மருத்துவர்கள்: கிருமியைக் கண்டறிய துல்லிய பரிசோதனை முறைகள் தேவை
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்ட இருவருக்கு டெங்கி காய்ச்சலும் இருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. ஆனால், மீண்டும் பரிசோதித்தபோது அவர்களுக்கு டெங்கி இல்லை என்பது தெரியவந்தது.
இவ்வாறு கொரோனா கிருமித்தொற்று, டெங்கி ஆகிய இரண்டாலும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களில் முதலாமவர் 57 வயது மாது; அடுத்தவர் 57 வாயது ஆடவர்.
இந்தத் தகவல்கள் ‘தி லேன்செட்’ எனப்படும் மருத்துவ சஞ்சிகையில் இம்மாதம் 4ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்று குறிப்பிட்டது. தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு. இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, பலதுறை மருந்தகங்கள், சுற்றுப்புற சுகாதாரக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர் குழு இந்தக் கட்டுரையை வெளியிட்டது.
மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களும், கொரோனா கிருமித்தொற்றைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை முறைகள் தேவை என்பதைக் காட்டுவதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19க்கு காரணமான கிருமி Sars-CoV-2 என்று கூறப்படுகிறது.
அவர்கள் இருவருக்கும் முதலில் டெங்கி இருப்பதாக பரிசோதனை முடிவுகள் காட்டியதையடுத்து, அவர்களுக்கு டெங்கிக்கான சிகிச்சைதான் வழங்கப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு இருமல், சுவாசப் பிரச்சினை போன்றவை ஏற்பட்டதையடுத்து பரிசோதித்ததில் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கொவிட்-19க்கான சிகிச்சை வழங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விருவருக்கும் முதலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் டெங்கி பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்தது தவறான தகவல் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய தவறான பரிசோதனை முடிவுகள் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக டெங்கி பாதிப்பு உள்ளோருக்கு காய்ச்சல், தோலில் தடிப்பு போன்றவை ஏற்படும். ஆனால், கொரோனா கிருமித்தொற்று கண்டவர்களுக்கு காய்ச்சர், இருமல், மூச்சுப் பிரச்சினை, தொண்டை வலி போன்றவையும் காணப்படும்.
இவ்விருவருக்கும் முதலில் டெங்கி அறிகுறிகளும் பின்னர் கொரோனா அறிகுறிகளும் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #டெங்கி