கொரோனா, டெங்கி - இரு கிருமித்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் மாது
கொரோனா, டெங்கி என இரு கிருமித்தொற்றுகளால் ஒருவர் பாதிக்கப்படுவது மிக அரிது என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும் சிங்கப்பூரில் 57 வயது மாது ஒருவருக்கு இவ்விரு கிருமித்தொற்று நோய்களும் ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு நேற்று (பிப்ரவரி 20) உறுதி செய்தது.
ஒருவர் பலவிதமான மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். ஆனால் அது நோயாளிக்கு எவ்வித சிக்கலை ஏற்படுத்தும் என்பது பற்றி குறிப்புகள் இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.
“டெங்கி கிருமி கொவிட்-19 கிருமியாக மாறாது. இவை இரண்டும் வெவ்வேறு கிருமிகள்,” என்று அமைச்சின் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
இவ்விரு கிருமித்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிசோதனை முடிவுகளில் தவறேதும் இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அவருக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து தனி அறைக்கு அவர் மாற்றப்பட்டார். டெங்கிக்காக அவர் சிகிச்சை பெற்றபோது அவரது வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
டெங்கி கிருமியால் பாதிக்கப்படுவோருக்கு பொதுவாக காய்ச்சல், சருமத் தடிப்புகள் தோன்றும்; ஆனால், சுவாசப் பிரச்சினை இருக்காது என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், கொரோனா கிருமித்தொற்று கண்டவர்களுக்கு இருமல், சளி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆயினும் ஆரம்பகட்டத்தில் இவ்விரு நோய்களையும் இனம்பிரித்துக் கண்டறிவது சிரமம் என்று நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
#கொரோனா #டெங்கி #சிங்கப்பூர் #தமிழ்முரசு