'2022ஆம் ஆண்டு வரை அவ்வப்போது பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் தேவைப்படலாம்'
வரும் 2022ஆம் ஆண்டு வரை அவ்வப்போது பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் தேவைப்படலாம் என ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா கிருமி குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் டி.எச்.சான் பொதுச் சுகாதாரப் பள்ளியின் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் கொரோனா கிருமிப் பரவல் எவ்வாறு இருக்கக்கூடும் என பல்வேறு கணிப்புகள், கடந்த 14ஆம் தேதி ‘சயன்ஸ்’ சஞ்சிகையில் வெளியான அந்த ஆய்வு முடிவுகளில் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
கொரோனா கிருமிப் பரவல் குறிப்பிட்ட பருவகாலங்களில் நிகழுமா? அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகியகால அல்லது நீண்டகால நோயெதிர்ப்புத் திறன் உருவாகுமா? அவ்வாறு நோயெதிர்ப்புத் திறன் உருவானால் அது மற்ற கொரோனா கிருமிகளுக்கு எதிரான திறனாக இருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
8 முதல் 12 வாரங்களுக்கு பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால் கிருமிப் பரவல் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுள் ஒருவரான நோயெதிர்ப்புத்திறன் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் யோனாதன் கிராட் குறிப்பிட்டார்.
ஆயினும் அந்தக் காலகட்டத்தில் சிலருக்கு நோய்ப் பரவல் ஏற்படும் சாத்தியம் இருக்குமென்றும் அவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தோன்றும் என்றும், அந்தக் காலகட்டத்தில் மீண்டும் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க வளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றும் ஆய்வு முடிவு குறிப்பிட்டது.
கொவிட்-19 சிகிச்சைகள் அளிக்கும் திறன் இருந்தாலோ, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்கான திறன் போதிய அளவு இருந்தாலோ, தீவிரமாக தொடபுகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வசதிகள் இருந்தாலோ அல்லது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலோ, பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் தளர்த்தப்படலாம் என்றார் அவர்.
சமூக இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினால், அது புதிய கொரோனா நோயாளிகள் பெருமளவில் உருவாக வழிவகுக்கும் என்பதை அந்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.
கொரோனா கிருமிப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் எதுவும் இல்லாத நிலையில், 2022ஆம் ஆண்டு வரை பாதுகாப்பான இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அது தெரிவிக்கிறது.