'குளிர்சாதனப் பெட்டி பயன்பாடு மூலம் கொரோனா கிருமி பரவல் நிகழலாம்'
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், குளிர்சாதனப் பெட்டி மூலம் கொரோனா கிருமி பரவல் நிகழும் என்று தெரிய வந்துள்ளது.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டு, குவாங்ஸு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தின் நெறிமுறைகள் குழு அனுமதித்த இந்த ஆய்வில், குவாங்ஸுவில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரே நேரத்தில் உணவருந்திய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் இருந்த குளிர்சாதனம் வழியாக கிருமிப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வூஹானிலிருந்து குவாங்ஸுவுக்கு சென்ற ஒரு நோயாளி ஜனவரி மாத இறுதியில் அந்த உணவகத்தில் வேறு மூன்று குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். ஒரு மீட்டருக்கும் குறைவான தூர இடைவெளியில் அமைந்திருந்த வேறு இரண்டு மேசைகளில் இரண்டு குடும்பத்தார் உணவருந்தினர்.
அதே நாளின் பிற்பகுதியில், வூஹானிலிருந்து வந்திருந்த அந்த நோயாளிக்கு காய்ச்சல், இருமல் போன்ற கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. பின்னர், அவருக்கு கிருமித்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அங்கு அதே சமயத்தில் உணவருந்திக்கொண்டிருந்த அந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது.
வூஹானிலிருந்து வந்த நபரிடமிருந்து குளிர்சாதனப் பெட்டி வழியாக மற்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் பின்னர், அவர்களிடமிருந்து குடும்பத்தின் மற்ற நபர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
சன்னல்களே இல்லாத அந்த உணவகத்தில் அந்தக் குடும்பத்தினர் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டிருப்பர் என்று கூறப்பட்டது.
அந்த உணவகத்தில் அன்று உணவருந்திய மற்ற 73 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு உணவகங்களில் மேசைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிப்பதுடன் காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.
உள்ளூர் கிருமிப் பரவலை வெகுவாகத் தடுத்த சீனாவில், இரண்டாம் அலை அடிக்குமோ என்ற பயம் அங்கு நிலவி வருகிறது.