மின்தூக்கி பொத்தான்களுக்கு கிருமியை அண்டவிடாத பூச்சு இரண்டாவது முறையாக தெளிக்கப்படவுள்ளது
வீடமைப்பு வளர்ச்சிக் கழகங்களில் (வீவக) 26,000 மின்தூக்கிகளில் உள்ள பொத்தான்களுக்கு இம்மாத இறுதியிலிருந்து கிருமியை அண்டவிடாத பூச்சு இரண்டாவது முறையாக தெளிக்கப்படவுள்ளது.
கொரோனா கிருமி பரவி வரும் தற்போதைய சூழலில், ‘எஸ்டிஎஸ்டி’ என்று அழைக்கப்படும் இந்த ரசாயனப் பூச்சு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக முதன்முறையாக தெளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு மூன்று மாதங்களுக்கு கிருமியை அண்டவிடாதது என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மூன்று மாத காலகட்டம் முடிவடையவிருக்கும் வேளையில், இரண்டாவது முறையாக இந்தப் பூச்சு தெளிக்கப்படவிருக்கிறது.
‘பாக்டீரியா’, ‘வைரஸ்’, பூஞ்சைகள் அதில் படும்போது அவற்றைக் கொன்றுவிடும் தன்மையை இந்தப் பூச்சு கொண்டுள்ளது. மேலும், மின்தூக்கி பொத்தான்களை தேய்த்துக் கழுவிச் சுத்தம் செய்தாலும் அந்தப் பூச்சு இருக்கும். ஏனெனில், இதிலுள்ள ரசாயனப் பொருட்கள் பூசப்படும் தளத்தில் இறுகப்பிடித்துக்கொள்ள உதவுகின்றன.
இது வழக்கமான கிருமிநாசினிகளைப் போன்ற திரவ வடிவத்தில் மேற்பரப்பில் தெளிக்கப்படுகிறது. இது மனித தோலுக்கு பாதுகாப்பானது.
மின்தூக்கி பொத்தான்களில் இந்த ரசாயனப் பூச்சு தெளிக்கப்பட்ட பிறகு பொத்தான்களில் படியும் நுண்ணுயிர்களின் அளவு குறைவாக இருப்பதைப் பரிசோதனைகளின் முடிவுகள் காட்டின.
இரண்டாவது முறையாக இந்த ரசாயனப் பூச்சு தெளிக்கப்படவிருக்கும் முயற்சிக்கு தெமாசிக் அறநிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளதாக ஹாலந்து புக்கிட் பாஞ்சாங் நகர மன்றம் இன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ரசாயனப் பூச்சு பூசப்பட்டு இருப்பதால், குடியிருப்பாளர்கள் சாவி போன்ற கடினமான பொருட்களால் மின்தூக்கி பொத்தான்களை அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் செயல் கட்சியின் 15 நகர மன்றங்களுக்கான ஒருங்கிணைப்புத் தலைவரான டாக்டர் டியோ ஹோ பின் முன்னதாகக் கூறியிருந்தார். ஏனெனில், இது பூச்சுகளைப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
சிங்கப்பூரின் 26,000 வீவக மின்தூக்கிகளில் உள்ள 1.5 மில்லியன் மின்தூக்கி பொத்தான்களில் கடந்த ஏப்ரல் மாதம் ரசாயனப் பூச்சி தெளிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் வீவக வீடுகளில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.