வாஷிங்டன்: சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பூச்சு ஒன்று சில பொருட்களின் மீது பூசப்பட்டால் அவற்றை கொரோனா கிருமி அண்டாமல் 90 நாட்கள் வரை பாதுகாக்கலாம் என்று ஆரம்பகட்ட ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய தற்காப்பு அணுகுமுறையை இந்த ஆய்வு கோடிகாட்டுவதாகக் கருதப்படுகிறது.
அரிஸோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ள இந்த ஆய்வுப் பத்திரங்களின்படி, இந்தப் பூச்சு பூசப்பட்ட மேற்பரப்புகளின் மீதுள்ள கொரோனா கிருமியின் அளவு பத்தே நிமிடங்களில் 90 விழுக்காடு குறைவதாகவும் இரண்டு மணி நேரத்தில் 99.9 விழுக்காடு குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட பணிகளுக்கு தொழில்நுட்பம் தேவைப்படுவதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் உயிரணுவியல் விஞ்ஞானியும் இந்த ஆய்வின் மூத்த எழுத்தாளருமான சார்ல்ஸ் ஜெர்பா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“அதிகமானோர் பயன்படுத்தும் ரயில், பேருந்துகளின் இருக்கைகள் போன்றவற்றின் மேற்பரப்புக்கு இது முக்கியமாகப் பொருந்தும் என எண்ணுகிறேன். சாதாரண கிருமிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினாலும் அடுத்த பயணி வந்து இருக்கையில் அமரும்போது அந்த மேற்பரப்புகள் மாசுபடுத்தப்பட்டுவிடுகின்றன,” என அவர் கூறினார்.
“இருக்கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கான அவசியத்தை இது அகற்றிவிடாது. ஆயினும், சுத்தம் செய்யப்படும் நேரங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு இது பாதுகாப்பு அளிக்கும்,” என்று அவர் கூறினார்.
‘எலாய்ட் பயோசைன்ஸ்’ நிறுவனம் இந்த ஆய்வுக்கு ஆதரவு அளித்தது.