தடுப்பூசியின் விளைவாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோருக்கு $2,000 வழங்கீடு
கொவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு கடுமையான பக்கவிளைவுகள் கார ணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் நாளை (மார்ச் 17) முதல் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
‘விஃபாப்’ எனும் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பிலான தடுப்பூசி பக்கவிளைவு நிதி உதவித் திட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்துடன் கடுமையான பக்கவிளைவுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வழங்கும் மருத்துவ தகவல்களும் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அனைத்து விண்ணப்பங்களையும் ஒரு சுயேச்சையான மருத்துவர்கள் குழு மறுஆய்வு செய்து பக்கவிளைவுகள் எந்த அளவுக்குக் கடுமையானவை என்றும் அவை கொடுக்கப்பட்ட தடுப்பூசியுடன் எவ்விதம் தொடர்புள்ளது என்றும் முடிவு செய்யும்.
பக்கவிளைவுகளின் கடுமையைப் பொறுத்து ஒருமுறை வழங்கப்படும் தொகை நிர்ணயிக்கப்படும்.
தடுப்பூசி பக்கவிளைவுகளால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைவோருக்கு $2,000 வழங்கப்படும்.
தடுப்பூசி பக்கவிளைவுகளால் அதிக சார்பு அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டு, குணமடைவோருக்கு $10,000 வழங்கப்படும்.
தடுப்பூசி பக்கவிளைவுகளால் மரணமடைவோருக்கும் கடுமையான நிரந்தர உடற்குறை ஏற்பட்டவர்களுக்கும் $225,000 வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட $10,000 மற்றும் $225,000 தொகை பற்றி சுகாதார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி அறிவித்தது.
ஆனால், $2,000 தொகைக்கான அறிவிப்பு இன்றுதான் வெளியிடப்பட்டது.
மேற்கூறப்பட்ட கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரிவினர் தவிர்த்து, கடுமையான தடுப்பூசி பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு கூடுதல் ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் இந்த $2,000 உதவித் தொகை வழங்கீடு பற்றி முடிவுஎடுக்கப்பட்டது என்றும் அமைச்சு விளக்கியது.