முஃப்தி: ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்
ரமலான் நோன்பு மாதத்தில் கொவிட்-19 தடுப்பூசியும் மூக்கு திரவ பரிசோதனையும் அனுமதிக்கக்தக்கவையே என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்து உள்ளது.
முஸ்லிம்கள் சிலர், ரமலான் மாதத்தில் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்ற சந்தேகம் காரணமாக அதை ஒத்திவைக்க விரும்புகிறார்கள் என்று சிங்கப்பூரின் ஆக உயரிய இஸ்லாமிய சமயத் தலைவர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் கூறினார்.
“தடுப்பூசி ஒருவரின் நோன்பை முறித்துவிடாது. மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகளின்படி முன்னெச்சரிக்கைகளுடன் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்பதே தேவையானது,” என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் ரமலான் நோன்பு மாதம் ஏப்ரல் 13 முதல் மே 12 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தகுதி உள்ள தங்கள் குடும்பத்தாரையும் நண்பர்களையும் ஊசி போட்டுக்கொள்ளும்படி ஊக்குவித்து வருகிறார்கள் என்றும் இதற்குத் தான் நன்றி கூறுவதாகவும் அவர் கூறினார். முயிஸ் அலுவலகம் இன்று (மார்ச் 20) கையேடு ஒன்றை வெளியிட்டது. கிருமித்தொற்று தொடர்பான வழிகாட்டி நியதிகள் அதில் உள்ளன. சமயம் தொடர்பான கேள்விகளுக்கு விடைகளும் அதில் இருக்கின்றன.
இதனிடையே, சிங்கப்பூர் பள்ளிவாசல்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் ரமலான் மாத சிறப்புத் தொழுகைகள் (தராவீஹ் மற்றும் கியாமுல் லைல்) இடம்பெறும் என்று முஃப்தி அறிவித்துள்ளார்.