கொவிட்-19 தடுப்பூசிகளை முஸ்லிம்கள் போட்டுக்கொள்ள அனுமதி: அவசரத்தைக் கருதி முஃப்தி எடுத்த முடிவு
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசிகளை முஸ்லிம்கள் போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று அறிவித்து இருந்தது. நோய்ப் பரவல் சூழலின் அவசரத்தைக் கருத்தில்கொண்டு முஃப்தி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சமயம் தொடர்பான வழிகாட்டுதல்களை ஃபத்வா குழு வழங்கும். ஆனால் தற்போது கொவிட்-19 தடுப்பூசியை முஸ்லிம்கள் போட்டுக்கொள்ள அனுமதி அளிப்பது தொடர்பான வழிகாட்டுதலை முஃப்தி அலுவலகம் நேரடியாக வழங்கியுள்ளது.
“பாதுகாப்பான பயன்பாட்டிற்காக சிங்கப்பூரில் தடுப்பூசி கிடைத்தவுடன் முஸ்லிம்கள் அதைப் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சமுதாயத்திற்கு நாம் ஆற்றும் பங்காக அதை நாம் செய்வோம். இந்த விவகாரத்தில் சமய வழிகாட்டுதல் மிகவும் தெளிவாக இருப்பதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி உண்டா இல்லையா என்பது குறித்து கவலை வேண்டாம்,” என்று முஃப்தி நசிருடின் முகம்மது நசிர் இன்று (டிசம்பர் 14) செய்தியாளர்களிடம் கூறினார்.
உயிர்களைக் காத்து அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கே உடனடியாக முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “இந்த இலக்குகளை எட்டுவதில் தடுப்பூசி ஏற்படுத்தும் வித்தியாசத்தை நாங்கள் அறிந்துள்ளோம்,” என்றார்.
தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் அதனால் ஏற்படும் பலனையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை டாக்டர் நசிருடின் வலியுறுத்தினார். தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பொறுப்பு வகிக்கும் சிங்கப்பூரின் ஒழுங்குமுறை, நெறிமுறை அமைப்புகள் மீது நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.