70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியாவிற்கு வழங்குகிறது ஃபைசர்
மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், 70 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.510 கோடி) மதிப்புள்ள கொரோனா தடுப்பூசி மருந்து பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான ஆல்பர்ட் போர்லா தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்திய பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், “கொரோனா பெருந்தொற்று பரவலால் நெருக்கடியான சூழ்நிலையைச் சந்தித்துள்ள இந்தியாவில் அண்மைய நிலவரம் குறித்து அக்கறை கொண்டுள்ளோம். எங்களது இதயங்கள் உங்களுக்கும் உங்கள் அன்புகுரியவர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆல்பர்ட் போர்லா கூறுகையில், “கொரோனாவுக்கு எதிராக இந்தியா எதிர்கொண்டுள்ள போரில் நாங்களும் பங்குகொள்ள விரும்புகிறோம். அதற்காக எங்களது நிறுவன வரலாற்றில் இல்லாத வகையில் மிகப்பெரிய நிவாரணப் பணியினை முன்னெடுக்கிறோம்.
“தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள ஃபைசர் இணை நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது இந்திய அரசாங்கத்தின் கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
“இந்தியாவின் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகள் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துப் பொருட்கள் உடனடியாக கிடைக்கும். இந்திய அரசாங்கம் மற்றும் எங்களது தொண்டு நிறுவனங்களின் மருந்துப் பொருட்களின் தேவை அதிகமுள்ளோருக்கு இந்த மருந்துகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.