கொவிட்-19 பதில் நடவடிக்கைகளைத் தற்காத்துப் பேசும் மலேசிய அரசாங்கம்
மலேசியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நேற்று மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு நாளை (மே 12) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
இந்நிலையில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்துள்ளார்.
சுகாதாரத் துறை மற்றும் மற்ற துறைகளைச் சேர்ந்த குழுவினருடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் மலேசிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, நடமாட்டக் கட்டுப்பாட்டின்போது அத்தியாவசியத் தேவையைத் தவிர வேறு எதற்கும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“நாம் அவ்வாறு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதன் வழி, தொற்றைக் கட்டுப்படுத்த பாடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு மறைமுகமாக உதவிசெய்ய முடியும்,” என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டின்போது திருமணம் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்கள், விழாக்காலங்களில் உறவினர்களின் வீடுகளுக்கு வருகைபுரிவது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (மே 11) அந்நாட்டில் புதிதாக 3,973 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 22 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.