பொதுமக்களுக்கு பிரதமர் லீ அறிவுறுத்து: அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து, தேவையின்றி வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்
சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேலும் சில கட்டுப்பாடுகள் இன்று (மே 14) அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “கடந்த இரு வாரங்களாக உருவெடுத்துள்ள புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களும் முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சமூகத்தொற்றும் மிகவும் கவலை அளிக்கிறது. கிருமித்தொற்றுப் பரிசோதனையை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். கிருமிப் பரவலை முறியடிக்க எங்களால் ஆன அனைத்தையும் செய்து வருகிறோம். எனினும், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை தேவை,” என்று பதிவிட்டார்.
அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து, தேவையின்றி வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்குமாறும் அரசின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் லீ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது, ‘டிரேஸ்டுகெதர்’ பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார்.