அமைச்சர்: உயர் வடிகட்டும் திறனுடைய முகக்கவசம் அணிக
உயர் வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசங்களை அணியுமாறும், இந்த “முக்கியமான காலகட்டத்தில்” கொவிட்-19 பரவலைக் குறைக்க வீட்டிலேயே இருக்குமாறும் சிங்கப்பூர் மக்களை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக மக்கள் அருகில் இருக்கக்கூடிய மூடப்பட்ட (enclosed) இடங்களுக்குச் செல்லும்போது அதிக வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசம் அணிவது அவசியம். மருத்துவ முகக்கவசம் அல்லது வடிகட்டி இணைக்கப்பட்டது போன்றவை அதிக
வடிகட்டுதல் திறன் கொண்டவை. வெறுமனே துணியினால் ஆன முகக்கவசத்திற்கு இத்தகைய திறன் இல்லை என்றார் அவர்.
பல்வேறு உருமாற்ற கொவிட்-19 கிருமிகள் எவ்வாறு பரவக்கூடியவை, அவை காற்றுத்துகள் மூலம் எவ்வாறு பரவுகின்றன என்பதை அண்மைய சான்றுகள் காட்டுவதால் தகுந்த முகக்கவசத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என்றார் திரு வோங்.
கொவிட்-19 பரவலைக் கையாளும் அமைச்சுநிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், இன்று (மே 18) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தகுந்த முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்.