சிங்கப்பூரில் நாளை (மே 19) முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்பவர்களுக்கு முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு ஆறு முதல் எட்டு வாரங்கள் கழித்த பிறகே இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.
இந்த அறிவிப்புக்கு இணங்க, தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் 40 முதல் 44 வயது பிரிவினருக்கு நாளை (மே 19) முதல் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று (மே 18) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 12 முதல் 15 வயது பிரிவினருக்கும் தடுப்பூசித் திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவித்துள்ளது.
மக்களுக்குத் தடுப்பூசி போடும் உத்தியில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் கூடுதலாக 400,000க்கும் அதிகமானோருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாசியாவது போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது செயல்படுத்தப்பட்டால் ஆகஸ்ட் மாத தொடக்கத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் குறைந்தது ஒரு தடுப்பூசியாசியாவது போட முடியும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
“அனைத்தும் சுமூகமாக நடந்தேறினால், ஆகஸ்ட் மாதத்திற்குள் 4.7 மில்லியன் பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை இது குறிக்கிறது,” என்று அவர் விளக்கினார்.