12 முதல் 39 வயது வரை 73,000 பேர் தடுப்பூசிக்கு முன்பதிவு
சிங்கப்பூரில் 12-39 வயதுக்கு உட்பட்ட 73,000 பேர் கொவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துவிட்டனர். இது, சிங்கப்பூர் தனது தடுப்பூசி போடும் திட்டத்தை மற்ற வயதினருக்கும் விரிவுபடுத்திய முதல் நாளான நேற்று நண்பகல் வரைக்குமான நிலவரம்.
இந்த வயதுவரம்பில் உள்ளவர்களில் மொத்தம் 100,000 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் அதில் நான்கில் மூன்று பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துகொண்டனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மேலும், தடுப்பூசி போடுவதற்கான இடங்கள் அதிகரிக்கப்படும்போது கூடுதலான குறுஞ்செய்தி அழைப்புகள் விடுக்கப்படும் என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரரில் 12-39 வயதுக்கு உட்பட்டோர் மிகப் பெரிய எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் உள்ளனர்.
அதனால் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முன்பதிவு செய்வதற்கு அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதார் அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருந்தார்.
மேலும் மொடர்னா தடுப்பூசியைத் தெரிவு செய்வோர் முன்கூட்டியே அதனைப் போட்டுக்கொள்ளலாம் என்றும் ஒப்புநோக்க ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி போட்டுக்கொள்ள காலதாமதம் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.
பன்னிரண்டு முதல் 15 வயதுக்கு உடபட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி மட்டுமே போட முடியும் என்பதால் இந்நிலை என்று வியாழக்கிழமை நடந்த அனைத்து அமைச்சு நிலை செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங் கூறியிருந்தார்.
அதனைத் தவிர கடந்த புதன்கிழமை நிலவரப்படி 4.4 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டன என்றும் 2.5 மில்லியன் பேர் குறைந்தது ஒரு முறை கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இது சிங்கப்பூர் மக்கள் தொகையில் சுமார் 44% ஆகும்.