கொவிட்-19 தொற்றால் இந்தியாவில் 4.9 மில்லியன் பேர் மரணம்: ஆய்வு
இந்தியாவில் 2020 ஜனவரிக்கும் 2021 ஜூன் மாதத்திற்கும் இடையில் கொவிட்-19 காரணமாக ஏறத்தாழ 4.9 மில்லியன் பேர் (ஏறத்தாழ அரை கோடி) மரணமடைந்திருக்கக்கூடும் என்று அமெரிக்காவை சேர்ந்த புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு பேரிடர் சம்பவம் அங்கு இதுவரை நிகழ்ந்ததே இல்லை என்று அந்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 காரணமாக 414,000க்கும் மேற்பட்டவர்கள் மாண்டு இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொடங்கியது முதல் இந்த ஆண்டு ஜூன் வரை பல காரணங்களாலும் மரணமடைந்தவர்களை அந்த ஆய்வு உள்ளடக்கி இருக்கிறது.
வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் ‘உலக நிலவரங்களுக்கான மையம்’ என்ற அமைப்பு அந்த ஆய்வை வெளியிட்டு உள்ளது.
உருமாறிய கொவிட்-19 டெல்டா கிருமி வேகமாக பரவியதால் மே மாதம் மட்டும் குறைந்தபட்சம் 170,000 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மரண எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கலாம் என்று அந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
இதனிடையே, அந்த அறிக்கை பற்றி இந்தியாவின் சுகாதார அமைச்சு இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.