புதிதாக 3,101 பேருக்கு கிருமித் தொற்று
சிங்கப்பூரில் புதன்கிழமை (பிப்ரவரி 2) நண்பகல் நிலவரப்படி 3,101 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்களில் 2,919 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் 182 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
மருத்துவமனைகளில் 819 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது செவ்வாய்க்கிழமை இருந்த எண்ணிக்கையைவிட 63 அதிகம்.
அவர்களில் 74 பேருக்கு செயற்கை உயிர் வாயு தேவைப்பட்டது. 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர்.
ஒருவர் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தார். ஆனால் அதுபற்றி சுகாதார அமைச்சு மேல்விவரம் அளிக்கவில்லை.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் கிட்டத்தட்ட 59 விழுக்காட்டினருக்கு ஏஆர்டி பரிசோதனைகளின் மூலம் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வழி அவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை அல்லது மிதமான நோய் அறிகுறிகள் இருந்தன என்பது தெரிய வருகிறது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 1.41 ஆக இருந்தது. ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை அன்று அந்த விகிதம் 1.64 ஆக இருந்தது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் தொற்று நிலவரம் எப்படி இருந்தது என்பதை காட்டுகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் தகுதிபெற்றவர்களில் 92 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 58 விழுக்காட்டினருக்கு பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.