தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் தாதியர், கட்டுமானப் பணியாளர்கள் என தேர்ச்சிமிக்க இந்திய ஊழியர்களை வரவேற்கத் தயாராகிறது ஐரோப்பிய நாடான ஜெர்மனி.
சரியான தேர்ச்சிகளைக் கொண்ட இந்தியக் குடியேறிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் அந்நாட்டு அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவிற்கான ஜெர்மானியத் தூதர் டாக்டர் ஃபிலிப் ஆக்கர்மன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழியர் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஏற்கெனவே சில சட்ட நடைமுறைகளை ஜெர்மானிய அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்நிலையில், குடியேற்ற நடைமுறையை எளிதாக்கவும் அந்நாடு நடவடிக்கை எடுத்து வருவதாக டாக்டர் ஆக்கர்மன் கூறினார்.
இப்போதைக்கு ஏறக்குறைய 21,000 இந்தியர்கள் நீல அட்டை பெற்று, ஜெர்மனியில் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிக தேர்ச்சி பெற்ற ஊழியர்களை மட்டும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி எதிர்பார்க்கவில்லை.
“தாதியர்களும் பராமரிப்பாளர்களும் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி பெறுவதற்காக கேரளாவில் ஒரு பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். முதலாவதாக அங்கிருந்து 150 பேர் விரைவில் ஜெர்மனிக்குக் கிளம்பவுள்ளனர்,” என்றார் டாக்டர் ஆக்கர்மன்.
அதுபோல், ஜெர்மனி சென்று வேலையில் சேரும் விதமாக பெங்களூரில் தற்போது கொத்தனார்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 பேர் ஏற்கெனவே ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் வட்டாரத்தில் இறைச்சி வெட்டுநர்களாகப் பணியாற்றி வருவதையும் அவர் சுட்டினார்.
இறைச்சி வெட்டுநர், தச்சர், தாதியர் எனப் பலதரப்பட்ட தொழில்களில் தேர்ச்சிபெற்ற இந்தியர்களை ஜெர்மனி எதிர்பார்ப்பதாகவும் டாக்டர் ஆக்கர்மன் கூறினார்.
மதிக்கத்தக்க சம்பளம், சமூக அங்கீகாரத்துடன் ஜெர்மனியில் கைவினைத்தொழிலர்களுக்கு நல்ல மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.