மூன்று நாள்களைக் கொண்ட வார இறுதிக்கு மாறுவது குறித்து சவூதி அரேபியா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாரத்திற்கு நான்கு நாள்கள் மட்டும் வேலை செய்து, மூன்று நாள்கள் ஓய்வளிப்பது குறித்து சவூதி மனிதவள, சமுதாய மேம்பாட்டு அமைச்சு ஆராய்ந்து வருவதாக ‘அல் மதினா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதியில் தற்போது வேலை நடைமுறை மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
உள்ளூர் அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகளை ஈர்க்க சவூதி முயன்று வருகிறது. இந்நிலையில், சவூதியில் வேலை நடைமுறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற அந்நாட்டின் மனிதவள, சமுதாய மேம்பாட்டு அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.
பொதுவாக, சவூதியில் முக்கிய நிறுவனங்கள் பலவும் வெள்ளி, சனிக்கிழமைகளை வாரயிறுதி நாள்களாகக் கொண்டுள்ளன.
நான்கு நாள் வேலை, மூன்று நாள் ஓய்வு என்ற நடைமுறை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) சில பகுதிகளில் ஏற்கெனவே நடப்பில் இருக்கிறது. இதனால் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதாகவும் ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதும் குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஷார்ஜாவில் உள்ள அரசாங்க அமைப்புகள் கடந்த 2022 ஜனவரியில் இருந்து நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறின.