ஷார்ஜா: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது ஆடவர் ஒருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கொல்லப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானியர் ஒருவரைக் காவல்துறை அதிகாரிக கைதுசெய்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் இரண்டு கேரள ஆடவர்களும் ஓர் எகிப்து ஆடவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்ட நபரின் பெயர் ஹக்கிம். அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு பேரங்காடியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார் என்றும் கேரள ஊடகச் செய்தி கூறியது.
தமது சக ஊழியர்கள் இருவருக்கும் அருகிலுள்ள காப்பிக்கடையில் பணியாற்றிய பாகிஸ்தான் ஆடவருக்கும் வாக்குவாதம் மூண்டதைக் கண்ட ஹக்கிம், அவர்களை விலக்கிவிட முயன்றார்.
ஆனால், அப்போது அந்தப் பாகிஸ்தானியர், ஹக்கிமைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
ஹக்கிமின் குடும்பத்தினர் அவருடன் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வசித்து வந்தனர் என்றும் அண்மையில்தான் அவர்கள் இந்தியா திரும்பினர் என்றும் சொல்லப்பட்டது.