புதுடெல்லி: தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி, அதனை ரத்து செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி வங்கிகளுக்கும் அது உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறலாம்.
அந்தச் சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி, இரண்டு பொது நல அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், அச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு, அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி மூத்த வழக்கறிஞர் அனுப் சௌத்ரி என்பவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்விடம் முறையிட்டார்.
இதனையடுத்து, வழக்கின் முக்கியத்துவம் கருதி, வழக்கு விசாரணையை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்தார்.
அதன்படி தலைமை நீதிபதி, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை மூன்று நாள்கள் விசாரித்து, தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் வியாழக்கிழமை (பிப்ரவரி 15) காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
கடந்த 2019 ஏப்ரல் 12 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து விவரங்களையும் 2024 மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டத்தின்கீழ், தனிமனிதர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒருவரோ ஒரு நிறுவனமோ எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். அப்பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாள்களுக்குள் பத்திரத்தைப் பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் செலுத்தப்படும்.