எர்ணாகுளம்: வெளிமாநில ஊழியர் ஒருவரைக் கட்டிவைத்து அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இதன் தொடர்பில் பத்துப் பேரைக் கைதுசெய்து, காவல்துறை விசாரித்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அசோக்தாஸ், 24. இவர் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், மூவாட்டுப்புழா அருகே வாலக்கம் பகுதியிலுள்ள ஓர் உணவகத்தில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், அசோக் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 4) மாலையில் உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணைப் பார்க்கச் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து விசாரித்தது. அவர்களிடமிருந்து அசோக் தப்பித்து ஓட முயன்றார். ஆனால், அவரைப் பிடித்த கும்பல், அவரை இரும்புத் தூணில் கட்டிப்போட்டு, கடுமையாகத் தாக்கியது.
தகவலறிந்து காவல்துறை அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அசோக்கின் உடலிலிருந்து ரத்தம் அதிகமாகச் சொட்டியது. அவர் நெஞ்சிலும் தலையிலும் காயமடைந்திருந்தார்.
உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அசோக்கைத் தாக்கியதற்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை முயன்று வருகிறது. அவர் பார்க்கச் சென்ற பெண் அவர்மீது புகாரளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.