டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்னும் புனைப்பெயர் கொண்ட மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை அதிபர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார்.
முன்னதாக, டெல்லி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருணை மனு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மனுவைப் பரிசீலித்த அமைச்சகம் இன்று (ஜனவரி 17) காலை அதனை அதிபருக்கு அனுப்பி வைத்தது. கருணை மனுவை நிராகரிக்குமாறு அதிபரை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று முகேஷின் கருணை மனுவை அதிபர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் இன்று பிற்பகலில் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதற்கு ஏதுவாக நால்வரும் திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3க்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே, மரண தண்டனை தள்ளிப்போவது குறித்து கொல்லப்பட்ட மாணவியின் தாயார் ஆஷாதேவி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆஷா தேவி, “நான் இதுவரை அரசியல் பேசியதில்லை. ஆனால் எனது மகளைச் சீரழித்த குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானது தொடர்பாக பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன.
“இரு கைகளை ஏந்தி நீதி கேட்கிறேன். 2012ஆம் ஆண்டில் கறுப்புக்கொடிகளுடன் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று அரசியல் லாபங்களுக்காக என் மகளின் மரணத்துடன் விளையாடுகிறார்கள்,” என்றார்.
#தமிழ்முரசு #நிர்பயா #தூக்குத்தண்டனை #கருணைமனுநிராகரிப்பு