மனைவி சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் சயனைடு விஷத்தைக் கலந்து அளித்து அவரைக் கொன்ற வங்கி அதிகாரியை போலிசார் கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சேஷப்ப தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான ரவி சைதன்யா. மதனப்பள்ளியில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 27 வயதான ஆமனி. இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி இறந்துவிட்டார்.
சம்பவத்தன்று, ஆமனி கழிவறையில் மயங்கிய நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததால், வீட்டிற்குச் சென்று மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக மருத்துவர்களிடம் ரவி சைதன்யா தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ஆமனிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆமனி உயிரிழந்தார்.
ரவி சைதன்யாவின் கோரிக்கைக்கு இணங்கி, ஆமனியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யாமலேயே ஒப்படைக்க மருத்துவர்கள் முன்வந்தனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற ஆமனியின் பெற்றோர் தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து போலிசில் புகார் செய்தனர். ஆமனியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் அவர்கள் புகாரில் குறிப்பிட்டனர்.
அதன்பேரில், வரதட்சணை கேட்டதாக ரவி சைதன்யா, அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு விஷம் காரணமாக ஆமனி இறந்திருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ரவி சைதன்யாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சயனைடு விஷத்தை மாத்திரையில் கலந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஆமனி சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் சயனைடு விஷத்தை சிறிது சிறிதாக அளித்து அவரை கொன்றது தெரியவந்தது.
#சயனைடு#மனைவியைக்கொன்ற#வங்கிஅதிகாரி#தமிழ்முரசு