புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றை எதிர்கொள்வது சவாலான விஷயம் என்றும் இதில் பொதுமக்கள் ஆதரவு தேவை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா கிருமித் தொற்றுக்கு மத்தியில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றார்.
“நம் கண் முன்னே ஒரு சவால் இருக்கிறது. அது கொரோனா கிருமியுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
“கிருமித் தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். சமூகத்திலும் நமது நடத்தையிலும் மாறுதல் வேண்டும்,” என்றார் லாவ் அகர்வால்.
கிருமித் தொற்றால் குறிப்பிட்ட பகுதியில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இரண்டு நாட்களுக்கு முன்புவரை கிருமித் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை இரட்டிப்பாக 12 நாட்களானது.
ஆனால், இப்போதோ 10 நாட்களில் இரட்டிப்பாகிறது.
“அதேசமயம் நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் இதுவரை யாருக்கும் கரோனா நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை,” என்றும் லாவ் அகர்வால் மேலும் குறிப்பிட்டார்.