வழிபாட்டு இடங்களுக்கு நியதிகள்
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்கும் வகையில் பல தடைகள் ஜூன் 30 வரை நடப்பில் இருந்துவரும். என்றாலும் ஜூன் 8ஆம் தேதி ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றுக்குப் பல வழிகாட்டி நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டு இடங்களைப் பொறுத்தவரை, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிரசாதம் வழங்கக்கூடாது, புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படக் கூடாது, புனித நூல்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றைத் தொடக்கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் உணவகங்களுக்கும் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் நிலநடுக்கம்
பெங்களூரு: கர்நாடகாவில் ஹம்பி மாவட்டத்திலும் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூர் மாவட்டத்திலும் நேற்றுக் காலை 7 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹம்பி மாவட்டத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது. ஜாம்ஷட்பூர் மாவட்டத்தில் 4.7 ரிக்டர் அளவு நிலம் நடுங்கியது. இரு நிலநடுக்கங்களால் உயிர்ச் சேதம், பொருட்சேதம் குறித்த தகவல் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
ஜியோவில் புதிய கொள்முதல்
மும்பை: இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில், அபுதாபியின் பிரபல நிறுவனமான முபாதலா, ஜியோவின் 1.85% பங்குகளை ரூ.9,003 கோடிக்கு வாங்குகிறது.
இது, ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கூடிய ஆறாவது பெரிய அனைத்துலக உடன்பாடு ஆகும்.
ஜியோவின் 18.97% பங்குகளை இதுவரை ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, முபாதலா, கே.கே.ஆர் ஆகிய ஆறு பெரிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
மாநாட்டில் பங்கேற்றோருக்கு தடை
புதுடெல்லி: புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 13ஆம் தேதி தப்லீக் ஜமாத் அமைப்பின் கூட்டம் நடந்தது. அதில் இந்தியா மற்றும் தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 2,200 பேர் சுற்றுலா விசாவில் வந்து விதிகளை மீறி நடந்துகொண்டதாகக் கூறி மத்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாக அவர்கள் இந்தியா வர 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்திய உதவியை நாடும் பிரான்ஸ்
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாகக் கருதப்படுவதாகவும் பிரான்ஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பாபர் மசூதி: வாக்குமூலம் பதிவு
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை வியாழக்கிழமை பதிவு செய்யத் தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி, பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சாக்ஷி மகாராஜ் ஆகியோரும் அடங்குவர்.
பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார், முன்னாள் எம்பி ராம் விலாஸ் வேதாந்தி உட்பட குற்றம் சாட்டப்பட்ட வர்களில் நான்கு பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாயினர். மற்றவர்கள் நேற்று முன்னிலையாக இருந்தனர்.
1.07 லட்சம் இந்தியர் திரும்பினர்
புதுடெல்லி: கொரோனா கிருமி ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் இதுவரை 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் 3வது கட்டம் வரும் 14ஆம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.