இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதன்முறையாக அடுத்த 80 ஆண்டுகளில் மக்கள் தொகை குறையும் என அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையானது எதிர்வரும் 2048ஆம் ஆண்டு 170 கோடியாக அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுநாள்வரை மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தபடியேதான் உள்ளது. ஆனால் 2048ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இதில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 195 நாடுகளின் மக்கள் தொகை, இறப்பு விகிதம், மக்களின் இடம்பெயர் விகிதங்கள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 150 நாடுகளின் கலப்புப் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான கண்டுபிடுப்புகளால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டன.
இதன்மூலம் உலகில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவும் சீனாவும் எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் உச்சத்தைத் தொடும் என்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உச்சத்தைத் தொட்ட பிறகு இவ்விரு நாடுகளின் மக்கள் தொகையில் கடும் சரிவு ஏற்படும் என்றும் 2100ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையானது அதன் உச்சபட்ச மக்கள் தொகையில் 51 விழுக்காடாக சரியும் என்றும் இந்தியாவின் மக்கள் தொகை அதன் அதிகபட்சத்தில் 68.1 விழுக்காடாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைக்குத் தகுதியான வயதுடைய நபர்களின் எண்ணிக்கை சுமார் 76 கோடியாக உள்ள நிலையில், 2100இல் இது 57.8 கோடியாகக் குறையும் என்றும் அச்சமயம் உலகளவில் இந்தியா இரண்டாவது பெரிய நிகரக் குடியேற்றத்தைக் கொண்டிருக்கும் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.