இந்தியா, சீனா இடையே லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற 8வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளும் அந்தப் பகுதியிலிருந்து படைகளை மீட்டுக்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 3 கட்டங்களாக படைகள் மீட்டுக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
முதல்கட்டமாக இரு நாடுகளின் ராணுவங்களும் ஒரே நாளில் பீரங்கி வண்டிகள், கவச வாகனங்களை எல்லைக் கோட்டில் இருந்து மீட்டுக்கொள்ள வேண்டும். இரண்டாம் கட்டமாக லடாக் பான்காங் ஏரியின் வடக்கு கரை பகுதியில் தினமும் 30% வீரர்களை இரு ராணுவங்களும் மீட்டுக்கொள்ள வேண்டும். இந்திய வீரர்கள் தான் சிங் தாபா நிலைக்கும் சீன வீரர்கள் பிங்கர் 8 நிலைக்கும் திரும்பிச் செல்ல வேண்டும்.
மூன்றாம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்குக் கரையில் முகாமிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்கள் அவரவர் பழைய நிலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை இருதரப்பும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கலாம் என்றும் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போர்ப் பதற்றம் ஏற்பட்டதால் எல்லையில் இரு நாடுகளும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்தன.
ஆனால், எல்லையில் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதன் தொடர்பில் இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளிடையே 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை வரும் வாரத்தில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.