அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுகாதார ஊழியர்களுக்கும் வயதானவர்களும் ‘ஆக்ஸ்ஃபர்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்றும் அதன்பின் ஏப்ரலில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரும் என்றும் ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவாலா தெரிவித்துள்ளார்.
இருமுறை அந்தத் தடுப்பூசியை போட வேண்டியது அவசியம் என்றும் அதற்கு அதிகபட்சம் ரூ.1,000 விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் திரு பூனவாலா குறிப்பிட்டார்.
பெரும்பாலும் 2024ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடலாம் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சநிலை மாநாட்டில்’ பங்கேற்றபோது அவர் சொன்னார்.
“கொள்முதல், வரவுசெலவுத் திட்டம், தளவாடம், உள்கட்டமைப்பு, மக்களின் விருப்பம் போன்ற பல காரணங்களால் இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம்.
தடுப்பூசியின் செயல்திறன் பற்றிக் கேட்டதற்கு, ஆக்ஸ்ஃபர்ட்-அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி முதியோரிடத்திலும் நல்ல பலனைத் தருகிறது என்றும் பக்க விளைவு ஏதும் இல்லை என்றும் திரு பூனவாலா கூறினார்.
மற்ற நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்று குழந்தைகளிடத்தில் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்ற அவர், அதனால் குழந்தைகளுக்கு அந்தத் தடுப்பூசி போடுவதில் அவசரப்பட வேண்டியது இல்லை என்றும் இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.