ஹாங்காங்: தியானன்மென் சதுக்க சம்பவத்தின் 32 ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பில் ஹாங்காங்கில் நேற்று பல இடங்களில் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலிசார் நேற்று ஊடகங்களிடம் கூறினர்.
செயுங், 20, என்னும் உணவு விநியோகிப்பு ஊழியரும் சோவ், 36, எனப்படும் பெண்ணும் விசாரணைக்காக போலிசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் முழுப் பெயர் சோவ் ஹாங் துங் என்று கூறிய போலிசார், சீனாவில் உள்ள ஒரு ஜனநாயக இயக்கத்தின் ஆதரவாளராகவும் ஹாங்காங் கூட்டணி என்னும் அமைப்பின் துணைத் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தததாகத் தெரிவித்தனர்.
சீனாவில் செயல்பட்டு வரும் ஜனநாயக இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் தியானன்மென் சதுக்கப் படுகொலைச் சம்பவத்தின் நினைவாக மெழுகுவத்தி ஏந்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
தியானன்மென் சதுக்க போராட்டத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை விக்டோரியா பார்க் செல்ல இருப்பதாக சோவ் கூறியிருந்ததாக ஊடகங்கள் கூறின.
அதனைத் தொடர்ந்து தமது அலுவலகத்தின் அருகே அப்பெண் கைது செய்யப்பட்டதை ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
1989ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிக்கும் ஜூன் 4 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் தியானன்மென் சதுக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அந்த சதுக்கத்தின் அருகே போராட்டம் நடத்தினர். அவர்களை ஒடுக்க ராணுவம் முற்பட்டபோது அது வன்முறையில் முடிந்தது. அதில் எத்தனை பேர் உயிரிழந் தனர் என்ற விவரத்தை சீன அர சாங்கம் வெளியிடவில்லை.