புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டின் கண்காணிப்பு நிறுவனத்தின் 'பெகாசஸ்' என்ற செயலியைக் கொண்டு இந்தியாவில் முந்நூறுக்கும் அதிகமானோர் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமைச்சர்கள் இருவர், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருடைய கைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் அதன் வழி கிடைத்த உளவுத் தகவல்கள் இந்திய அரசுக்கு விற்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு இதை வலுவான ஆதாரங்களற்ற குற்றச்சாட்டு எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையின் மூலம், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஐம்பதாயிரம் பேர் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலரான திருமுருகன் காந்தி, செய்தியாளர்கள் இஸாம் சிங், ரோகினி சிங், ரித்திகா சோப்ரா, முஜமின் தலில் ஆகியோரின் கைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னணி செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் பலரும் உளவு வளையத்துக்குள் இருந்துள்ளனர்.
எனினும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் பலரது பெயர்கள் வெளியிடப்படவில்லை. அவை பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சமயத்தில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.