கொரோனா தொற்றுள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு மரபணுப் பரிசோதனை
புதுடெல்லி: உருமாறிய கொரோனா வகையான 'ஓமிக்ரான்' தொற்றுப் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி உள்ளது. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் இரு கொரோனா நோயாளிகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனை வழி உறுதியாகி உள்ளது.
இத்தகவலை இந்திய சுகாதார அமைச்சு நேற்று மாலை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இருவரும் ஆடவர்கள் என்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
46 மற்றும் 66 வயதுடைய இருவரிடமும் தொற்றுக்கான கடும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மற்ற உலக நாடுகளிலும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களிடம் கடும் அறிகுறிகள் தென்படவில்லை என்று லால் அகர்வால் சுட்டிக்காட்டினார். பெங்களூரு விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, தொற்று அபாயம் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் மெல்ல அதிகரித்து வருகிறது.
தொற்று அபாயம் உள்ள நாடுகளில் இருந்து புதுடெல்லி வந்த மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்தனர். ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மூவருக்கும் லண்டனின் இருந்து வந்த பயணி ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றியிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்தது.
அவர்களது பரிசோதனை மாதிரிகள் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறினார். அவை ஓமிக்ரான் வகைக் கிருமியா இல்லையா என்பதைக் கண்டறிய அங்கு மரபணுச் சோதனைகள் நடத்தப்படும்.
ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து வந்த ஆறு பயணிகளின் மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு அதன் முடிவுக்காக சுகாதார அமைச்சு காத்திருக்கிறது.
இதற்கிடையே, அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து மும்பை வந்த 76 பேரை அங்குள்ள அதிகாரிகள் அடையாளம் கண்டு கிருமிப் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த 76 பேரும், ஒன்றுக்கு மேற்பட்ட ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவான தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.