வசதிகுறைந்த குடும்பத்தில் பிறந்தபோதும், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோருக்கும் வசதி வாய்ப்பற்றோருக்கும் நீதி கிடைக்கச் செய்ய ஏதுவாக வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே அதிபர் ஹலிபா யாக்கோப்பிற்கு உதித்தது.
தந்தை இருந்தபோதே ஏழ்மை நிலையில் இருந்த அதிபர் ஹலிமாவின் குடும்பம், தந்தை இறந்த பிறகு மேலும் சிரமத்திற்குள்ளாகியது.
தம் தாயார் நடத்திய உணவுக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தே தமது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்தார் அதிபர் ஹலிமா.
"வசதி இல்லாதோரிடம் குறைவான அதிகாரமே இருந்ததையும் அவர்களின் குரல் செவிமடுக்கப்படாததையும் கண்டேன்," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை முன்னாள் மாணவர் சங்கம் 2021 டிசம்பரில் வெளியிட்ட 'லா லிங்க்' சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் அதிபர் ஹலிமா தெரிவித்துள்ளார்.
இவையெல்லாம், இவர் தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயில தூண்டுகோலாக விளங்கின. பின்னர் இவர் தேசிய தொழிற்சங்க காங்கிரசில் (என்டியுசி) வழக்கறிஞராகச் சேர்ந்தார். தொழில்சார் உறவுகளிலும் வேலைவாய்ப்பு உரிமைகளிலும் தொழிற்சங்கங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்குவது இவர் பணியாக இருந்தது.
என்டியுசியில் 33 ஆண்டுகள் பணிபுரிந்தார் அதிபர் ஹலிமா.
"ஊழியர்களின் குரலாக இருந்து, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி, பாகுபாடற்ற வேலையிடத்தை உறுதிசெய்ததாக நான் நினைக்கிறேன். அது முழு மனநிறைவு அளித்த காலகட்டம்," என்றார் திருவாட்டி ஹலிமா.
2001ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகும், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களின் நல்வாழ்விற்காகச் செயலாற்றுவதில் இவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.
2011 முதல் 2013 வரை துணை அமைச்சராகவும் பின்னர் 2013 முதல் 2017 வரை நாடாளுமன்ற நாயகராகவும் இருந்த இவர், வாழ்க்கைச் செலவினம், கட்டுப்படியாகும் சுகாதாரப் பராமரிப்பு, நியாயமான வேலைவாய்ப்பு விவகாரங்கள் ஆகியவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசினார்.
திருவாட்டி ஹலிமா அரசியலில் இறங்கியபோது, சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு எம்.பி.யாகத் தேர்வுபெற்ற முதல் மலாய் பெண் இவர்தான்.
தொழிலாளர் இயக்கம் மட்டுமின்றி, பரந்த சமூகத்திற்கும் பங்களிக்க விரும்பியதாகவும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற பொறுப்பு தமக்கிருப்பதாக நினைத்ததாகவும் திருவாட்டி ஹலிமா சொன்னார்.
"தங்களது தொழிற்சங்கங்களில் அல்லது என்டியுசியில் தலைமைத்துவப் பதவிகளை ஏற்கும்படி இளம்பெண்களை இணங்கச் செய்யும் பொறுப்பும் எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. வேலை-வாழ்க்கைச் சமநிலையைப் பேணுவதில் உள்ள சிரமத்தைச் சுட்டி, பலரும் அதனை ஒரு தடையாகக் குறிப்பிட்டதால் அது ஒரு கடினமான பணியாக இருந்தது," என்று நினைவுகூர்ந்தார் அதிபர்.
கொள்கை வகுப்பதில் பெண்கள் பங்கெடுப்பதும் அவர்கள் தங்களது கருத்துகளைச் செவிமடுக்கச் செய்வதும் முக்கியம் என்று தாம் நம்புவதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பாலின சமத்துவத்தை எட்டுவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்பும் அவர், மற்ற பெண்களுக்குத் தாம் வழியமைத்துத் தந்துள்ளதாக நம்புவதாகவும் சொன்னார்.