“கொரோனா, டெல்டா, ஓமிக்ரான் பற்றி இப்போது வெளிவரும் அதிர்ச்சி செய்திகளுக்கு மத்தியில் இப்போது மயிலாடுதுறை மக்கள் எச்சரிக்கையுடன் கூடிய அணுகு முறையைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது,” என்று கடைத்தெருவுக்குப் பேட்டிரி மோட்டார்சைக்கிளில் வந்த பீதாம்பரம், 48, என்ற தொழில்நுட்பர் கூறினார்.
“இதுவரை நாங்கள் எப்படியோ சமா ளித்து மீண்டுவிட்டோம். ஓமிக்ரானையும் மீண்டு விடுவோம்,” என்று கடைத்தெருவில் சாலை ஓரம் பூ, காய்கறி, பழம் விற்றுப் பிழைக்கும் ஏழை எளிய மக்கள் நம்பிக்கை யுடன் சொல்வதை நீங்கள் இப்போது மயிலாடுதுறை வந்தால் கேட்க முடியும்.
மயிலாடுதுறை, கடந்த இரண்டு ஆண்டு காலமாக உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவுக்கு விதிவிலக்கல்ல என்றாலும்கூட மாநிலத்தின் இதர பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இந்த நகரம் அவ்வளவாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட திரு சொக்கலிங்கம், 65, என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.
“கொரோனா தொற்று தலைகாட்டியது முதலே மிக அதிகமாகப் பாதிக்கப்படாத பகுதியாக மயிலாடுதுறை இருந்துவருகிறது. பொதுவாக பாதுகாப்பு நடைமுறைகளை 65% மக்கள் பின்பற்றிவருகிறார்கள்.
“நகரிலும் மாவட்டத்திலும் 2019க்கு முன்பு போலவே இப்போது மக்கள் நடமாடுவதைச் சில நேரங்களில் பார்க்க முடிகிறது. கொரோனாவை மக்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. ஜனவரி 6ஆம் தேதி மாநிலம் எங்கும் கெரோனா தொற்று கூடுவதாகச் சொல்லி அரசு வெளியிட்ட அறக்கையின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கிருமி தொற்றியோர் வெறும் மூவர்தான்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கடற்கரை வழியாக தெற்கு நோக்கிப் புறப்பட்டு பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நகர்களைக் கடந்து, சுமார் 280 கி.மீ., சென்றால் மயிலாடுதுறை என்ற அழகான, பசுமை நகரை அடையலாம்.
சிதம்பரத்தைக் கடந்த உடனேயே குளிர் காற்றுடன்கூடிய டெல்டா பகுதிக்குள் நுழையும் ஓர் உணர்வு ஏற்பட்டுவிடும்.
கர்நாடகாவில் தோன்றும் காவிரிக் கடலில் கலக்கும் முகத்துவாரம் அருகே சுமார் 15 கி.மீ. தெலைவில் அமைந்திருக்கும் கடலோர நகரான மயிலாடுதுறை, வர்த்தக நகர் அல்ல. வாழ்விடத்துக்குத் தோதான ஒரு நகரம். காவிரிக்கரையில் மயில்கள் ஆடியதால் மயூரம் என்றும் மாயவரம் என்றும் மாயூரம் என்றும் கடைசியாக 1980களில் இருந்து மயிலாடுதுறை என்றும் அந்த நகரம் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1,172 சதுர கிமீ பரப்பளவு உள்ள, மொத்தம் 917,000 மக்களைக்கொண்ட ஆகப் புதிய 38வது மாவட்டமாக உதயமாகி இருக்கிறது மயிலாடுதுறை.
மயிலாடுதுறைதான் மாவட்டத்தின் தலைநகரம். 1800களின் பிற்பகுதி முதல் ஊராட்சி, பிறகு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வரும் அந்த நகரில் மட்டும் சுமார் 100,000 பேர் வசிக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி.
தேசிய சராசரி அளவைவிட கல்வித் தகுதி அதிகம் உள்ள நகரம். பாரதிதாசன் பல்கலையுடன் இணைந்த, சென்ற நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஏவிசி தன் னாட்சிக் கல்லூரி உள்ளிட்ட ஏழு கல்லூரிகள், 1800களில் தோற்றுவிக்கப்பட்ட பள்ளிக் கூடங்கள், அரசு, தனியார் மருத்துவ மனைகள் எல்லாம் உண்டு.
மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் ஒருசில குடிசை வீடுகளைப் பார்க்கலாம். அவற்றை அதிநவீன ‘ஆடி’ கார்கள் கடந்து செல்வதையும் பார்க்கலாம். வாகனங்கள் பெருத்த நகரம். விவசாயிகள் அதிகம். மாயவரம் ஏர்கலப்பை மிகப் பிரபலம். ஊழியர்களில் கால்வாசி பேர் அலுவலகங்கள், தொழிற்கூடங்களில் வேலை பார்ப்பவர்கள்.
புறநகர்ப் பகுதிகளில் மரங்களுக்குக் கீழே புல் தரையில் அமர்ந்தபடி இளைஞர்கள் மடிக்கணினிகளில் வேலை பார்ப்பது வழக்கம். தகவல்தொழில்நுட்ப நகரம். ஒரு சில நேரங்களில் புழுதி பறக்கும் கடைத் தெரு ஓரம் மடிக்கணினிகளை வாங்கலாம். நுண்ணிழை இணையச் சேவை உண்டு.
“ஆயிரமானாலும் மாயூரமாகாது; மாயூரம் காற்றைச் சுவாசித்தால் ஆயுளில் மூன்றாண்டுகள் கூடும் என்றெல்லாம் வழி வழியாகக் கூறப்படுவதுண்டு.
“மயிலாடுதுறை, ஒருபுறம் கருவாட்டு வாசனையுடன் கூடிய மிகப் பிரபலமான சந்தைக்குப் பெயர் போனது.
“மறுபுறம், பழத்தில் சிறந்த ‘பாதிரி’ என்ற மயிலாடுதுறைக்கே உரிய மாம்பழம் வாசனை மூக்கைத் துளைக்கும்,” என்றார் அந்த நகரில் பிறந்து அங்கேயே வசிக்கும் திரு ராஜேந்திரன், 74, என்ற விவசாயி.
கவிச்சக்கரவர்த்தி கம்பர், அபிராமி பட்டர், முத்துத்தாண்டவர், பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் தமிழில் வெளியான முதல் புதினத்தை எழுதிய மயூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழ்த் தாத்தா உ வே சுவாமிநாத ஐயரின் தமிழ் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை;
உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர மேதை தோடி ராஜரத்தினம் பிள்ளை, உலக சதுரங்க மன்னன் விசுவநாதன் ஆனந்த் முதல் தில்லையாடி வள்ளியம்மை, எழுத்தா ளர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி;
திரைப்பட கலைஞர்கள் எம்.கே. தியாகராஜ பாகவதர், குமாரி கமலா, டி. ராஜேந்தர் எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல கலைஞர்கள் பிறந்து வளர்ந்து உருவான இடம் மயிலாடு துறை அல்லது அருகிலுள்ள பகுதிகளில்தான்.
நகரிலும் புறநகர் பகுதிகளிலும் வரலாற்றுச் சின்னங்களை, பூம்புகார் போன்ற புராதனங்களைக் காணலாம்.
மிகப் பழமையான மாயூரநாதர் பெரிய கோயிலுடன் பாடல் பெற்ற சைவ சமயத் தலமாக விளங்கும் மயிலாடுதுறை, நவக்கிரகக் கோயில்கள் அமைந்துள்ள ஒன்பது ஊர்களுக்கும் மத்தியில் உள்ள ஒரு நகரம்.
நாகூர் ஆண்டவர் தர்காவும் வேளாங்கண்ணி தேவாலயமும் அருகே அமைந்து மயிலாடுதுறை பல சமய நகராக ஜொலிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பல இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.
மாயூரத்திற்கே உரிய கடைமுழுக்கு இங்கு ஆண்டுதோறும் ஐப்பசியில் பிரபலம். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்கள் மயிலாடுதுறையிலும் அதன் அருகிலும்தான் அமைந்துள்ளன.
சித்தர்காடு போன்ற சித்தர்கள் வாழ்ந்த இடமும் இங்கேதான் உள்ளது. திருவாவடு துறையில் திருமூலர் 3,000 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் அவர் திருமந்திரத்தை இயற்றியதாகக் கூறப்படும் ஒரு மரத்தின் வம்சமும் திருவாவடுதுறையில் இன்னமும் இந்து சமய வழிபாட்டுக்குரிய இடமாக இருக்கின்றன.
மாநிலம் முழுவதும் அனைத்து இடங் களுக்கும் இணைப்புகளைக் கொண்டுள்ள மயிலாடுதுறை, முக்கியமான ரயில் சந்திப்பு நிலையம். அருகே 130 மீ தொலைவில் தெற்கே திருச்சி, வடக்கே புதுவை விமான நிலையங்கள் உள்ளன. புயல், நிலநடுக்கம் முதலான பேரிடர்களுக்கும் இந்த மாவட் டத்திற்கும் அவ்வளவாகத் தொடர்பில்லை.
காவிரி ஆற்றுக்கு நடுவே அமைந்துள்ள மயிலாடுதுறையின் ஒரு பகுதியான கூறை நாடு ஒரு காலத்தில் நெசவு தொழிலுக்குக் கொடிகட்டி பறந்தது. முப்போகம் விளையும் பச்சை வயல்வெளிகளுக்குப் பஞ்சமில்லை.
இருந்தாலும், “எது இருந்து என்ன செய்வது. அரசியல் ரீதியில் பெரிய தலைவர்களை உருவாக்காமல் போனதால் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகவே மயிலாடு துறையில் அடிப்படை வசதிகள் மேம்படாமல் நகரம் தேங்கியே கிடக்கிறது,” என்று குமாரி மோகனசுந்தரி, 27, என்ற முதுகலைப் பட்டதாரி (ஆங்கிலம்) கவலைத் தெரிவித்தார். இதேபோல் இங்கு பலரும் புலம்புகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நகருக்குச் செல்ல வேண்டும்; மயிலாடுதுறை காற்றைச் சுவாசிக்க வேண்டும், ஆயுள் பெருக வேண்டும் என்ற ஆசை உதயமாகிறதா? அவசரப்படாதீர். கொரோனாவை நினைத்துக் கொஞ்ச காலம் பொறுத்து இருங்கள். இருகரம் நீட்டி உங்களை வரவேற்க மயிலாடுதுறை விரைவில் முழு மூச்சில் தயாராகிவிடும்.