புதுடெல்லி: உக்ரேன், ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார் இந்திய பிரதமர் மோடி.
இரு நாடுகளுக்கு இடையேயான எத்தகைய அமைதி முயற்சியாக இருப்பினும், அதற்காக பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என உக்ரேன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உக்ரேன், ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
உக்ரேனில் தற்போதுள்ள சூழல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாகவும் போரை நிறுத்த ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ள பிரதமர் மோடி, உக்ரேன் - ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் எனவும் அதிபர் ஸெலன்ஸ்கியிடம் வலியுறுத்தி உள்ளார். உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் வலியுறுத்தியபோதும் இந்தியா அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் போர் நிறுத்தத்துக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.