புதுடெல்லி: இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பல்வேறு அரிய பழங்காலப் பொருள்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிர்வாக ரீதியிலான விவகாரங்களே இதற்குக் காரணம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எட்டு முதல் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு அரிய கலைப் பொருள்கள், சாமி சிலைகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அனுமன் வெண்கலச் சிலை, கௌதம புத்தர் சிலை ஆகியவை தீபாவளிப் பண்டிகைக்கு முன்னரே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்திருக்க வேண்டும்.
எனினும், சில நிர்வாகச் சிக்கல் காரணமாக வந்து சேரவில்லை என இந்திய தொல்லியல் பிரிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"மீட்கப்பட்ட அரிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் அவற்றுக்கான போக்குவரத்துச் செலவு, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றைச் செலுத்த வேண்டியிருக்கிறது.
"இச்செலவுகளை தொல்லியல் துறை ஏற்றுக்கொண்டுள்ளது என்றாலும் சில நடைமுறைகளை பின்பற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது," என்று அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அனுமன் சிலை பத்து ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது. இதேபோல் பீகாரில் உள்ள குண்டல்பூர் கோவிலில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை பல ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது.
இவை இரண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய கலாசார அமைச்சர் கிஷன் ரெட்டி பிப்ரவரி மாதமே அறிவித்திருந்தார்.