அமிர்தசரஸ்: சிவசேனா கட்சித் தலைவரான 58 வயது சுதிர் சூரி நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித நகரமான அமிர்தசரசில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்நகரில் உள்ள குப்பை வீசும் இடத்தில் இந்துத் தெய்வங்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி திரு சூரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பட்டப்பகலில் பலர் கண்முன் ஒருவர் அங்கு வந்து திரு சூரியைத் துப்பாக்கியால்
சுட்டுக்கொன்றதகாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்தது.
திரு சூரியைக் குறிவைத்து அந்தத் தாக்குதல்காரர் துப்பாக்கியால் பலமுறை சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே தாக்குதல்காரர் பிடிபட்டார்.
உரிமம் வழங்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் திரு சூரியைக் கொன்றதாக நம்பப்படுகிறது.
திரு சூரிக்கு பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பு வழங்கியதாக அம்மாநில ஊடகம் தெரிவித்தது.
சீக்கிய சமயத்துக்கு எதிராக திரு சூரி அவதூறு பரப்பியதாகவும் இழிவுபடுத்திப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சீக்கியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் திரு சூரி மீது அவர்கள் சினங்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் திரு சூரி சீக்கியப் பெண்களைத் தூற்றிப் பேசிய, சீக்கிய சமயத்தை இழிவு
படுத்திப் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே குற்றங்களைப் புரிந்ததற்காக கடந்த ஜூலை மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் பொற்கோயிலுக்கு அருகில் குடிபோதையில் புகையிலை மென்றுகொண்டிருந்ததாக ஆடவர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது.
அப்போது அங்கிருந்தவர்கள் கண்முன் அந்த இளையர் வெட்டிக்கொல்லப்பட்டார்.