‘எங்களுக்கு கல்வி ஒரு கண், கழைக்கூத்து மறு கண்' என்கிறார்கள் மானாமதுரையைச் சேர்ந்த சௌந்தரராஜன்-புஷ்பா தம்பதியர்.
தமிழக அரசு இவர்களுக்கு கழைக்கூத்துக் கலைஞர்கள் என்ற சான்றிதழை வழங்கி இருக்கிறது. இவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசாங்க வீடுகள் என மொத்தம் 19 பேரைக் கொண்ட கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆறு சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகள் அடங்கிய இக்குடும்பத்தினர் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மாத காலத்திற்கு தமிழ்நாட்டின் நான்கு திசைகளுக்கும் சென்று கிராமப்புறங்களில் கழைக்கூத்து நடத்துகிறார்கள். அதை 'கிராமிய சர்க்கஸ்' என்று இவர்கள் கூறுகிறார்கள்.
சௌந்தரராஜன், 35 -புஷ்பா, 28, தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரும் இவரின் சகோதரர்களில் ஒருவரின் குடும்பமும் திருநாங்கூர் என்ற கிராமத்தில் கழைக்கூத்து காட்சி நடத்தினார்கள்.
“நான் செங்கல்பட்டில் பிறந்தேன். மதுராந்தகத்தில் பிளஸ்2 வரை படித்தேன். முடிந்தவரை படித்த நான் எங்கள் தொழிலைக் காக்க வேண்டும் என்பதற்காகப் படிப்பை அத்துடன் முடித்துக்கொண்டு என் உறவுக்காரரான இவரை மணந்துகொண்டேன்," என்று திருவாட்டி புஷ்பா, அருகில் இருந்த தன் கணவரைக் காட்டிக் கூறினார்.
“நாங்கள் ஆறு பேர் சகோதரர்கள். ஆறு பேரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். தாயார் இல்லை. வயதான தந்தை இருக்கிறார். இரு இரு குடும்பங்களாகப் பிரிந்து பல ஊர்களுக்கும் சென்று வித்தை நடத்துவோம்.
“மேசை, நாற்காலி, ஒலிபெருக்கி, வலைகள், போர்வைகள், திரைகள், வளையங்கள், மின்னாக்கி (ஜெனரேட்டர்) உள்ளிட்ட பல பொருள்களையும் வளர்ப்பு விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வாடகை வாகனத்தில் ஊர் ஊராகச் செல்வோம்.
“பெரிய கிராமங்களில் ஒதுக்குப்புறமான இடங்களைத் தேர்ந்தெடுத்து, சர்க்கஸ் கூடாரத்தை அமைக்க மூன்று நாள்களாகும். கிராமத்தில் யாரும் பயன்படுத்தாத இடங்களில் இலவசமாக தங்கி அங்கேயே சமைத்துச் சாப்பிடுவோம்,” என்று சாப்பாட்டு ராமன் என்ற தன் வித்தை குரங்கை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு கூறினார் திரு சௌந்தரராஜன்.
திருநாங்கூரில் கிட்டத்தட்ட 20 நாள்கள் இவர்களின் கழைக்கூத்து நடந்தது.
“ஒருவருக்கு நுழைவுக் கட்டணம் ரூ.40 வசூலிப்போம். கிராம மக்கள் என்பதால் பலரும் பேரம் பேசுவார்கள். கூட்டி குறைத்து வாங்கிக்கொள்வோம்.
“கழைக்கூத்து அன்றாடம் இரவு 7 மணி முதல் 9 மணிவரை நடக்கும். 6 மணிக்கே பாட்டுப் போட தொடங்கிவிடுவோம். அதைக் கேட்டு மக்கள் வரத் தொடங்குவார்கள். நிகழ்ச்சி நடக்கும்போது வெவ்வேறான இசையை ஒலிபரப்புவோம்.
“என்னிடம் உள்ள சாப்பாட்டு ராமன் குரங்கு கர்ணம் போட்டு வித்தை காட்டும். டீ போடுவது எப்படி என்பதை அதற்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
“வீரன் என்ற ஆடு கைகொடுக்கும், நெருப்பில் பாயும். ராமு என்ற நாய்க்கு ஏணியில் ஏறி கீழே குதிப்பதுபோல் பயிற்சி அளித்து வருகிறேன்,” என்று திரு சௌந்தரராஜன் மேலும் கூறினார்.
நடுவே குறுக்கிட்ட திருவாட்டி புஷ்பா, “எங்களுடைய மாமியாரின் பெயரில் ‘ராஜராஜேஸ்வரி சர்க்கஸ் கம்பெனி’ என்ற கழைக்கூத்து கம்பெனியை நாங்கள் நடத்தி வருகிறோம். இதை அரசாங்கத்தில் பதிந்து இருக்கிறோம்.
“எங்கும் கழைக்கூத்து நிகழ்ச்சியை நடத்தலாம் என்று காவல்துறையிடம் சான்றிதழ் வாங்கி வைத்து இருக்கிறோம். வளையம் சுத்துவது, வில்லாக வளைவது, என் கணவரின் தோள்பட்டையில் பல்டி அடித்து ஏறுவது போன்ற வித்தைகளைச் செய்வேன்,” என்று கூறினார் திருவாட்டி புஷ்பா.
“நான் பிளஸ்2 படித்தது வரை கழைக்கூத்தில் ஈடுபடவில்லை. அதன் பிறகுதான் இந்தத் தொழிலில் ஈடுபட்டேன். பழக்கம் என்பதால் வித்தைகள் எல்லாம் எனக்கு கைவந்த கலையாகிவிட்டன.
“எங்களின் மூன்று வயது மகளையும் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளையும் முடிந்த அளவுக்குப் படிக்க வைத்துவிடுவோம். அதற்குப் பிறகுதான் இத்தொழிலில் அவர்களை ஈடுபடுத்துவோம்.
“இந்தக் காலத்திலும் சரி, இனிமேல் வரக்கூடிய காலங்களிலும் சரி வெறும் படிப்பு மட்டும் உதவாது. கல்வி அறிவோடு ஒவ்வொருவருக்கும் அரிதான ஒரு வித்தையும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் பிழைக்க முடியாது.
“எங்களுக்கு கழைக்கூத்து ஏற்கெனவே ஒரு கண்ணாகிவிட்டது. கல்வியை நாங்கள் மறுகண்ணாக பார்க்கிறோம். இதுவே எங்கள் குடும்ப நம்பிக்கை. எப்படியானாலும் எங்கள் தொழிலை அழியவிடமாட்டோம்.
“எந்த வித்தையிலும் ஆபத்து இருக்கிறது. கழைக்கூத்து எங்களுக்குப் பழக்கமாகிவிட்டது என்பதால் அந்தக் கூத்துக்கு எங்கள் உடலும் ஒத்துழைக்கிறது. இருந்தாலும் எப்போதுமே கவனமாகத்தான் இருந்துகொள்ள வேண்டும்,” என்கிறார் திருவாட்டி புஷ்பா.
“இப்படி நான்கு திசைகளிலும் ஊர் ஊராகச் சென்று வித்தை நடத்தும் நாங்கள், ஆண்டில் இரண்டு மாதம்தான் மானாமதுரையில் சேர்ந்து இருப்போம். அந்த இரண்டு மாதமும் மழைக்காலம் என்பதால் எங்கும் சென்று வித்தை காட்ட முடியாது.
“எங்களிடம் ஒலிபெருக்கி, மின்னாக்கி இருக்கின்றன. வீடு இருக்கிறது. அவற்றை அடமானம் வைத்து பணத்தைக் கடன் வாங்குவோம். தொழில் செய்து அவற்றை அடைத்துவிடுவோம்.
“சில நேரங்களில் தேவையான பொருள்களை வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். ஒருநாளுக்குக் குறைந்தது ரூ.1,000 கிடைத்தால்தான் எங்களால் காலம் தள்ள முடியும்,” என்றார் திரு சௌந்தரராஜன்.
எப்படியும் வாழலாம் என்று இருப்போர் இருக்கிறார்கள். இனிமேல் இப்படித்தான் வாழ்க்கையை எதிர்நோக்க வேண்டும் என்று வாழும் சௌந்தரராஜன்-புஷ்பா தம்பதியும் இருக்கிறர்கள்.