புதுடெல்லி: கல்லூரி சேர்க்கையை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் மனிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், ’’கல்லூரிகளில் சேர்ந்த பின்னால், சில மாணவர்கள் சேர்க்கையைத் திரும்பப் பெற்றால் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ்களையும் கட்டணத் தொகையையும் திருப்பி அளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து யுஜிசிக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
“இது தொடர்பாக கடந்த ஜூன் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற யுஜிசி 570வது ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
“அதன்படி படிப்புகளுக்கான இடங்களை மாணவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரத்து செய்தால், முழுமையான கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். அதேபோல சேர்க்கையை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் அதிகபட்சமாக அலுவல் பணிகளுக்காக ரூ.1,000 மட்டுமே வசூலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் முழுக் கல்வியாண்டு அல்லது சம்பந்தப்பட்ட செமஸ்டருக்கான கட்டணத்தைப் பிடித்தம் செய்யக்கூடாது.
“மாணவர் சேர்க்கையின் கடைசித் தேதிக்கு அதிகபட்சம் 15 நாள்கள் அல்லது அதற்கும் அதிகமான நாள்களில் திரும்பப் பெற்றால், 100 விழுக்காட்டுக் கட்டணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையின் கடைசித் தேதிக்கு 15 நாள்களுக்குக் குறைவான நாள்களில் திரும்பப் பெற்றால், 10 விழுக்காட்டுக் கட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையைத் தரவேண்டும்.
“அதேபோல மாணவர்களின் சான்றிதழ்களைத் தாமதிக்காமல் திருப்பித் தர வேண்டும். இல்லையெனில் சார்ந்த கல்லூரிகளின் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதுநிலை கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்குள் ரத்து செய்தால், முழுமையான கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்.
“தொலைதூர, திறந்த நிலை மற்றும் இணைய வழிப் படிப்புகளைக் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.